Published : 18 Jul 2024 09:34 PM
Last Updated : 18 Jul 2024 09:34 PM

‘மகாராஜா’ இயக்குநர் நித்திலனை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்!

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநரை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அறிவூட்டிய இந்தச் சந்திப்புக்கு நன்றி விஜய் அண்ணா. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. மகாராஜாவைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னை நெகிழவைத்தன. இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக கருதுகிறேன். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. லவ் யூ ணா” என பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ கடந்த ஜூலை 12 நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து இந்தியாவில் டாப் 10 படங்களில் முதலிடத்தில் உள்ளது. அதே போல 14 நாடுகளில் ட்ரெண்டிங் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே இப்படம் 3.2 மில்லியன் பார்வைகளையும், 7.5 மில்லியன் பார்வை நேரங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

அண்மையில், நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களான ‘லாப்பாட்டா லேடீஸ்’, ‘படே மியான் சோட்டே மியான்’ ஆகிய படங்களின் பார்வைகளை ‘மகாராஜா’ முறியடித்துள்ளது. மேலும் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட 4-வது ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற பெருமையையும் ‘மகாராஜா’ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x