Published : 27 May 2024 03:21 PM
Last Updated : 27 May 2024 03:21 PM

‘மாயி’ பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவுக்கு சரத்குமார் இரங்கல்

சென்னை: சரத்குமார் நடிப்பில் வெளியான ‘மாயி’, ‘திவான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சூர்ய பிரகாஷ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சூர்ய பிரகாஷ். அடுத்து சரத்குமார், மீனா, வடிவேலு நடித்த ‘மாயி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் 2000-ம் ஆண்டு வெளியானது. தமிழ் சினிமாவுக்கு சிறிய இடைவெளி கொடுத்துவிட்டு, தெலுங்கில் ராஜசேகர், மீனாவை வைத்து அவர் இயக்கி படம் ‘பாரத சிம்ஹா ரெட்டி’ (Bharata Simha Reddy).

2003-ம் ஆண்டு மீண்டும் தமிழுக்கு வந்தவர், சரத்குமாருடன் இணைந்து ‘திவான்’ படத்தை இயக்கினார். 2015-ல் ஜீவன் நடிப்பில் வெளியான ‘அதிபர்’ படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து இயக்கிய அவரின் ‘வருச நாடு’ திரைப்படம் ரீலிசாகாமல் உள்ளது. இந்நிலையில், சூர்யபிரகாஷ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்ய பிரகாஷ் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x