Published : 29 Dec 2023 10:20 AM
Last Updated : 29 Dec 2023 10:20 AM

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் - நேரில் அஞ்சலி செலுத்திய ராம்கி வலியுறுத்தல்

சென்னை: நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்தின் பெயர் வைப்பதே அவருக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும் என்று நடிகர் ராம்கி தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலிக்கு செலுத்திய அவர் பின்னர் பேசியதாவது: “ஆபாவாணன் இயக்கத்தில் ‘செந்தூரப் பூவே’ என்ற படம். அதில் விஜயகாந்தின் கதாபாத்திர பெயர் கேப்டன். அந்த படத்தில் அவருக்கென்று ஒரு பெயர் கிடையாது. படப்பிடிப்பின்போது அப்படி கூப்பிட்டு கூப்பிட்டு எங்களுக்கெல்லாம் ‘கேப்டன்’ என்றே பழகிவிட்டது. அதன் பிறகு ‘கேப்டன் பிரபாகரன்’ படம் நடித்த பிறகு அந்த பெயர் அவருக்கு நிலைத்து விட்டது. அதுமட்டுமே காரணம் இல்லை. அப்போதெல்லாம் ஹீரோக்கள் பொதுப் பிரச்சினைகள் தலையிட மாட்டார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முதலில் களத்தில் இறங்கி நிற்பவர் விஜயகாந்த். அவருக்கு அது குறித்த கூச்சமோ பயமோ இருக்காது.

நடிகர் சங்கத்தில் இருந்த அத்தனை பிரச்சினைகளையும் தீர்த்து, கடன்களை அடைத்து அதனை ஒரு நேரான பாதைக்கு கொண்டு வந்த பெருமை விஜயகாந்தையே சேரும். எல்லா நடிகர்களும் தலைவனாக ஏற்றுக் கொண்ட ரியல் கேப்டன் அவர். அவரது குணத்தினாலும், திறமையினாலும்தான் அவருக்கு இந்த பெயர் கிடைத்தது. ‘செந்தூரப் பூவே’ படத்தில் ஒரு ஆக்‌ஷன் காட்சியின் போது அவரது தோள்பட்டை மூட்டு கழன்று விட்டது. ஒரு 10 நிமிடம் வலியால் துடித்துவர், பின்னரே அவரே தானாக அதை சரி செய்துகொண்டு மொத்த ஆக்‌ஷன் காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டுதான் சென்றார்.

எங்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் இன்று நன்றாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அவர்தான். எங்கள் அனைவருக்கும் அவர் கூடப் பிறக்காத அண்ணன் போன்றவர். திரைப்படக் கல்லூரியின் தந்தை என்று ஆபாவாணனை சொல்வோம். இத்தனை பேருக்கு வாழ்க்கை தந்த விஜயகாந்தின் பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு வைப்பது அவருக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” இவ்வாறு ராம்கி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x