Published : 15 Dec 2023 04:13 PM
Last Updated : 15 Dec 2023 04:13 PM

‘அயலான்’, ‘ஆலம்பனா’ படங்களை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' மற்றும் நடிகர் வைபவ் நடித்துள்ள 'ஆலம்பனா' ஆகிய திரைப்படங்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது. இந்தக் கடன் தொகையை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு, 3 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியது. மீதித்தொகையை அயலான் அல்லது வேறு எந்த படத்தை வெளியிடுவதாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன்பு திருப்பித்தருவதாக 2021-ல் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்நிலையில், ஆண்டுக்கு 13 சதவீத வட்டியுடன் சேர்த்து 14 கோடியே 70 லட்சம் ரூபாயை திருப்பித்தராமல் நடிகர் வைபவ் நடித்து, நாளை (டிச.15) வெளியாகவுள்ள ஆலம்பனா படத்தையும், ஜன.14-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘அயலான்’ படத்தையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறி, டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுளள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த இரண்டு படங்களையும் நான்கு வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவுக்கு, கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x