Published : 15 Nov 2023 05:57 AM
Last Updated : 15 Nov 2023 05:57 AM

வில்லன் வேடத்தில் நடிப்பை அதிகம் வெளிப்படுத்த முடியும் - நவீன் சந்திரா மகிழ்ச்சி

சென்னை: கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் இரக்கமில்லாத வில்லனாக நடித்திருக்கிறார், நவீன் சந்திரா. இதற்கு முன், பிரம்மன், சரபம், சிவப்பு, பட்டாஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் வில்லனாக நடித்தது பற்றி அவர் கூறியதாவது:

இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நான் நடித்த வில்லன் வேடத்தையும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். தியேட்டர் விசிட் சென்றிருந்தேன். பெண்கள் என்கதாபாத்திரத்தை ரசித்தது பெரிய விஷயம். நான் நடித்த ‘அம்மு’ என்ற தெலுங்கு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தில் நடந்தது. அதில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் விசாரித்தார். பிறகு அவரைச் சந்தித்தேன். இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பது பற்றி சொன்னார். உடனடியாக சம்மதித்தேன். தெலுங்கிலும் நான் நடித்து வருவதால் கால்ஷீட் சிக்கல் இருந்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எனக்காக, அவர் படப்பிடிப்பைச் சரி செய்தார். அது பெரிய விஷயம்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் நடித்தது சிறந்த அனுபவம். தமிழில் தொடர்ந்து சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். வில்லன் வேடங்களில், நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கும். அதனால், நடிப்பை வெளிப்படுத்தும் எந்த கேரக்டராக இருந்தாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். அடுத்து ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறேன். இதிலும் சிறப்பான கேரக்டர். இவ்வாறு நவீன் சந்திரா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x