Published : 01 Nov 2023 11:27 PM
Last Updated : 01 Nov 2023 11:27 PM

“நீங்கள் மன்னர்கள்; நான் உங்கள் தளபதி... ஆணையிடுங்கள்!” - 'லியோ' விழாவில் விஜய் பேச்சு

'லியோ' விழாவில் நடிகர் விஜய்

சென்னை: கடந்த மாதம் வெள்ளித்திரையில் வெளியானது நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் இதில் பேசியது:

“என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா... நண்பி. இவ்ளோ நாள் நான் தான் உங்கள என் நெஞ்சுக்குள்ள வச்சுருகேன்னு நினைச்சேன். இப்போது தான் உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு பெரிய இடத்தைக் கொடுத்து உள்ளீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னோட தோலை செருப்பாக தேய்த்து கொடுத்தாலும் உங்கள் அன்புக்கு ஈடாகாது. நான் உங்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். சமீப காலமாக சமூக வலைதளங்களில் உங்களது கோபம் அதிகமாக உள்ளது. ஏன்? இவ்வளவு கோபம் உடம்புக்கு நல்லதில்லை. அதெல்லாம் வேண்டாம் நண்பா. நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். அது நம்முடைய வேலையுமில்லை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது.

ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல மான், மயில், முயல், இந்த காக்கா, கழுகு. காடுன்னு இருந்தா இதெல்லாம் இருக்கும் தானே. அதுக்கு சொன்னேன் பா. ஒருத்தர் வில் அம்பு எடுத்து போறார். உன்னொருத்தர் ஈட்டி எடுத்து போறார். வில் எடுத்து போனவர் முயல அடிச்சி தூக்கிட்டாரு. ஈட்டி வைத்திருந்தவர் யானைய குறி வெச்சு மிஸ் பண்ணிட்டார். ரெண்டும் பேரும் ஊருக்கும் திரும்பி வருவாங்க. இதுல யாருக்கு வெற்றி. அந்த யானைய குறி வைத்தவர் தான் வெற்றி அடஞ்சவர்.

ஏன்னா, நம்மால் எதில் எளிதாக வெல்ல முடியுமோ அதை செய்வது வெற்றி அல்ல. எது முடியாதோ அதை செய்வது தான் வெற்றி. முயற்சியாவது செய்ய வேண்டும். பெரிதினும் பெரிது கேள். ஆசைப்பட வேண்டும். அதில் என்ன தப்பு இருக்கு.

படத்துல வர பாட்டுல ‘விரல் இடுக்குல தீ பற்றணும்னு’ எழுதியிருக்காங்க அத பேனா என்று எடுத்துக்கொள்ளலாம். அதேபோல ‘பத்தாது பாட்டில்’ என்று எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் சரக்கு என எடுத்துக் கொள்ள வேண்டும். கூல் என்று எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?. இப்படியான மழுப்பலான கதையெல்லாம் சொல்லி நான் எஸ்கேப் ஆக தேவையில்லை. தயவு செய்து, சினிமாவை சினிமாவாக பாருங்கள். பள்ளி கல்லூரி போகிற வழியில் ஒயின் ஷாப் இருக்கு. ரெண்டு ரவுண்டு போட்டுவிட்டா ஸ்கூலுக்கு போகிறார்கள்.

ஒரு முறை ஏவிஎம் சரவணன் சார், வடபழனி மெயின் ரோட்டுல கார்ல போனப்போ சிக்னல்ல இருந்த ஒரு அம்மாவுக்கு உதவி செய்திருக்கார. அந்த அம்மா உடனே நீ நல்லா இருப்ப எம்.ஜி.ஆர்-ன்னு சொல்லி இருக்காங்க. அந்த காலத்துல யார் அள்ளி கொடுத்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களா தான் இருக்கும். அப்படின்னு பேர். நாம யாரையும் ஒப்பிட்டு பேசல. நாம அவ்வளவு பெரிய ஆளும் இல்ல. ஆனா, நல்ல விஷயத்த எடுத்துக்கலாம். அந்த வகையில எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும் அதை நம்ம பசங்கா தான் பண்ணி இருப்பாங்க. அப்படின்னு ஒரு பேர் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை.

சரி, லியோவுக்கு வருவோம். இயக்குநர் லோகேஷ் கனகராஜை எண்ணி பெருமை கொள்கிறேன். ‘மாநகரம்’ நம்மள பாக்க வெச்ச. ‘கைதி’ எல்லாரையும் பாக்க வெச்ச. ‘விக்ரம்’ இந்தியாவையே பாக்க வெச்ச. இப்போ லியோ. இன்னும் ஹாலிவுட் மட்டும் தான் பாக்கி இருக்குன்னு நினைக்குறேன். உன்ன நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. 20 வயசுல ஹீரோயின் ஆகுறது பெருசு இல்ல. 20 வருஷமா முன்னணி ஹீரோயினா இருக்குறது தான் பெருசு. நம்ம இளவரசி குந்தவை (திரிஷா) சூப்பர். சஞ்சய் தத் சார், அர்ஜுன் சார், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் சார்னு இந்த படத்துல அங்கமா இருக்குற எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்.

அட்லி, லோகேஷ், நெல்சன் எல்லாரும் நம்ம பசங்க. அவங்களை எண்ணை நான் பெருமை கொள்கிறேன். அவர்கள் மிக திறமையானவர்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

பாருங்க, புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான். நடிகர் திலகம்னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலக நாயகன் ஒருத்தர் தான். சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர் தான். தல-னா ஒருத்தர் தான். நீங்கள் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி. நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்” என விஜய் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x