Published : 09 Sep 2023 02:09 PM
Last Updated : 09 Sep 2023 02:09 PM

“நல்ல கலைஞனை இழந்துவிட்டோம்” - மாரிமுத்துவுக்கு கமல், சூர்யா புகழஞ்சலி

சென்னை: நடிகர் மாரிமுத்து மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா இட்டுள்ள பதிவில், “இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அவர் எனது நலம் விரும்பியாக இருந்தார். ‘நேருக்கு நேர்’ தருணங்களில் எனக்கு உதவி செய்த உதவி இயக்குநர்களில் அவரும் ஒருவர். நிறைய பேசக் கூடிய, சுற்றி இருக்கும் உலகத்தை நட்புணர்வுடன் வைத்துக் கொள்ளக்கூடிய நகைச்சுவை குணத்தை எப்போதும் கொண்டிருந்தார். உங்களை அதிகம் மிஸ் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து நேற்று (செப்.08) மாரடைப்பால் காலமானார். ‘எதிர்நீச்சல்’ நெடுந்தொடர் மூலம் பிரபலமானவர் மாரிமுத்து. ‘பரியேறும் பெருமாள்’, ‘மருது’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் மாரிமுத்து குறித்து மேலும் படிக்க ---> நடிகர் மாரிமுத்து மறைவு - சில நினைவலைகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x