Published : 04 Aug 2023 04:38 PM
Last Updated : 04 Aug 2023 04:38 PM

“விஜய் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சிதான்” - நடிகர் அருண் விஜய்

திருவண்ணாமலை: “விஜய் அரசியலுக்கு வருவது குறித்து முதலில் அறிவிக்கட்டும்; சந்தோஷமான விஷயம்தான். அவர் வரும்போது நாம் வரவேற்போம்” என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, நடிகர் அருண் விஜய் பேசுகையில், “திருவண்ணாமலை அண்ணாமலையாரை பார்க்க வந்தால் மன அமைதி கிடைக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் புத்துணர்ச்சி கிடைக்கும். அடுத்தடுத்த எனது படங்கள் வெளியாக உள்ளன. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘மிஷன் சேப்டர் 1’ படம் வெளியாக உள்ளது. மீண்டும் திருவண்ணாமலைக்கு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரணம் இயக்குநர் பாலா இயக்கும் ‘வணங்கான்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற இருக்கிறது” என்றார்.

விஜய் அரசியல் முன்னெடுப்பு குறித்து பேசுகையில், “நல்ல விஷயம் தானே. யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் வர வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து முதலில் அவர் அறிவிக்கட்டும்; சந்தோஷமான விஷயம் தான். அவர் வரும்போது நாம் வரவேற்போம்” என்றார். மேலும் “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’’ என கேட்டபோது, “நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். பொதுப்பணிகளும் இருக்கிறது. எதிர்காலத்தில் பார்ப்போம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x