Published : 08 Jul 2023 03:52 PM
Last Updated : 08 Jul 2023 03:52 PM

“என் நண்பர் இல்லாவிட்டால் நினைவஞ்சலி போஸ்டருடன் வாழ்க்கை முடிந்திருக்கும்” - கலங்கிய வசந்தபாலன்

சென்னை: “என் நண்பர் இல்லாவிட்டால் நினைவஞ்சலி போஸ்டருடன் வாழ்க்கை முடிந்திருக்கும். இந்த வாழ்க்கையே பெரும் ஆசீர்வாதம் என நினைக்கிறேன்” என ‘அநீதி’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வசந்தபாலன் கலங்கிப் பேசினார்.

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் நடித்துள்ள ‘அநீதி’படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் வசந்தபாலன், “நல்லான் வகுத்ததா நீதி... இல்லை இங்கு வல்லான் வகுத்ததே நீதி. இந்த நீதி எளியோர்க்கு எப்போதும் அநீதி. இந்த அநிதீ, நீதியின் குரல். பேரன்பின் குரல். நீதி மறுக்கப்பட்டதன் குரல். நீதியின் தேவையை சொல்வதற்கு வந்துள்ளது இந்த அநீதி.

எளிமையான மனிதர்களின் குரலை அநீதி பேசும். அதனால்தான் இந்தப் படத்துக்கு அநீதி என டைட்டில் வைத்தேன். மனிதன் பேராசை கொண்டவன். மிருகம் போன்றவன். பக்கத்தில் இருப்பவனின் செல்போனும் வேண்டும், வீடும் வேண்டும். பணம் வேண்டும் என அலைபாயும் குரங்கு. அறத்தின் பக்கம் நின்று சகமனிதனை ஏற்றுகொள்ள சொல்வதே அநீதி. நான் இங்க சொல்ல விரும்புவது, ‘சாப்டியா.. உனக்கு எதாவது கஷ்டம் இருக்கா? இருந்தா சொல்லுங்க’ போன்ற இந்த வார்த்தைகளைத் தான் எதிர்பார்க்கிறேன். இந்த சிறு அன்பைத்தான் மொத்த உலகமும் மற்றவரிடம் எதிர்பார்க்கிறது.

நான் ஐசியூவில் மூச்சுத் திணறி படுத்திருந்தேன். மருத்துவருக்கு தெரியவில்லை. என் நண்பர் வரதராஜனுக்கு தெரிந்தது. ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்து அவர் டாக்டராக மாறி எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்து பின் உணர்ந்தார். அவர் அப்படி பார்க்காமல் இருந்திருந்தால் நினைவஞ்சலி போஸ்டருடன் இந்த வாழ்க்கை முடிந்திருக்கும். இந்த வாழ்க்கையே பெரும் ஆசீர்வாதம் என நினைக்கிறேன். இயக்குநர் ஷங்கர் எனக்கு ‘வெயில்’ படத்தை கொடுத்தார்.

இப்போது படத்தை இயக்கி தயாரித்திருக்கிறேன் என்றேன். சரி நான் வெளியிடுகிறேன் என்றார். ஜி.வி.பிரகாஷ் ‘நான் இருக்கேன் சார்’ என்றார். இந்த ‘நான் இருக்கேன் சார்’ என்ற குரல் என்னைச் சுற்றி ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இவ்வளவு அன்புக்கு நான் தகுதியானவரா என யோசித்துகொண்டே இருக்கிறேன்.

அர்ஜூன் தாஸிடம் நிர்வாணமாக ஒரு காட்சி எடுக்க வேண்டும் என்றேன். உடனே அவர், ‘பண்ணிடலாம்’ என யோசிக்காமல் ஒப்புக்கொண்டார். சிறந்த நடிகர் அவர். இந்தப் படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுகொடுக்கும். ‘மதயானை அரசாளும் காட்டில் தனக்கான இடம் தேடும் ஈசல்” என்ற கார்த்திக் நேதாவின் வரியைப்போல அந்த ஈசல் தான் அநீதி” என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x