Published : 21 Jun 2023 10:33 AM
Last Updated : 21 Jun 2023 10:33 AM

விரைவில் ‘புதிய பாதை’ இரண்டாம் பாகம் - பார்த்திபன் உறுதி!

சென்னை: 1989ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘புதிய பாதை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாக நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்தப் படம் உருவானதாக படக்குழுவால் சொல்லப்பட்டது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார். பதின்பருவ சிறுவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று, பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “மாலையும் இரவு சந்திக்கும் நேரம். புதிய பாதை எத்தனை மொழிகளில் முறையான அனுமதியின்றி எடுக்கப் பட்டிருந்தாலும் மகிழ்ச்சி” என்று பதிவிட்டிருந்தார். அப்பதிவில் ரசிகர் ஒருவர் ‘புதிய பாதை’ படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கமென்ட் செய்திருந்தார்.

ரசிகரின் அந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள பார்த்திபன், “தற்போது தயாராகிவரும் படம் முடிந்ததும் PP2 (புதிய பாதை 2) தயாராகும்” என்று தெரிவித்துள்ளார்.

புதிய பாதை: 1989ஆம் ஆண்டு வெளியான ‘புதிய பாதை’ பார்த்திபன் எழுதி இயக்கிய முதல் திரைப்படம். இப்படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. மேலும் இப்படத்தில் நடித்த மனோரமாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படம் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x