Published : 18 Jun 2023 02:10 PM
Last Updated : 18 Jun 2023 02:10 PM

“அதீத வேலைப்பளு” - பார்த்திபன் படத்துக்கு இசையமைக்க மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: அதீத வேலைப்பளு காரணமாக தனது புதிய படத்துக்கு தன்னால் இசையமைக்க முடியவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் ப்ரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்தப் படம் உருவானதாக படக்குழுவால் சொல்லப்பட்டது. 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் மற்றும் நகராத செட்டுகள் மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டன.

இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ’டீன்’ என்ற ஒரு படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார். பதின்பருவ சிறுவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்திபன் அணுகியுள்ளார். ஆனால் அதீத வேலைப்பளு காரணமாக தன்னால் இசையமைக்க முடியாது என்று ஏ.ஆர்.ரஹ்மான் அனுப்பிய மெயிலை பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘சார்.. தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் அதீத வேலைப்பளு காரணமாக இந்த முறை என்னால் உங்கள் படத்துக்கு இசையமைக்கமுடியவில்லை. நீங்கள் லட்சிய இயக்குநர்களில் ஒருவர் என்பதால் உங்களுடைய கதையை கேட்க நான் மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், பழகுதல் காதலால், விலகுதலும் காதலால், ஆதலால்… ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை! வரும் படத்திலும் இருவரும் இணைவோமென நினைத்து இயலாதபோது நண்பர் ஏஆர்ஆர் அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x