Published : 11 Jan 2020 08:21 PM
Last Updated : 11 Jan 2020 08:21 PM

'ஸ்பைடர்' தோல்வியடைந்தது ஏன்? - மனம் திறக்கும் மகேஷ் பாபு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'ஸ்பைடர்' படம் தோல்வியடைந்தது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் மகேஷ் பாபு.

அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு, விஜயசாந்தி, ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சரிலேரு நீக்கெவரு'. இன்று (ஜனவரி 11) வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு இருந்தாலும், வசூல் ரீதியாக எப்படி என்று நாளை தெரியவரும்.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'ஸ்பைடர்' படம் தோல்வியடைந்தது தொடர்பாகப் பேசியுள்ளார் மகேஷ் பாபு. ஏனென்றால், 'ஸ்பைடர்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி படுதோல்வியைச் சந்தித்தது.

'ஸ்பைடர்' தோல்வி தொடர்பாக மகேஷ் பாபு கூறுகையில், "முருகதாஸுடன் பணிபுரிந்த காலம் நன்றாக இருந்தது. இன்றும் இந்தியாவில் இருக்கும் சிறந்த இயக்குநர்களில் அவர் ஒருவர். அந்தப் படத்தின் பிரச்சினை என்னவென்றால், தெலுங்கில் நான் ஒரு நட்சத்திரம். தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை நான் புதியவன்.

நாங்கள் நாயகனைத் தூக்கிப் பிடிக்கும் விஷயங்களைக் குறைத்ததில் தெலுங்கு ரசிகர்கள் வருத்தமடைந்தனர். ஆனால் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்தது. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் படம் எடுக்கும்போது தன்னிச்சையாக அந்த நேரத்தில் செய்யும் சில விஷயங்களும், படைப்பாற்றலும் பாதிக்கப்படும். ஏனென்றால் ஒவ்வொரு காட்சியையும் இரண்டும் முறை எடுக்க வேண்டும். தெரியாத இடத்தில் இருக்கும் ரசிகர்கள் ரசிக்க நிறைய விஷயங்களைக் குறைக்க வேண்டியிருந்தது.

தெலுங்குதான் எனது வீடு. என் படங்கள் சிறப்பாக இருந்தால் அது ராஜமௌலி படங்கள், 'கேஜிஎஃப்' போல எல்லா இடங்களிலும் ஓடி தேசிய அளவில் ரசிகர்களுக்கான ஒரு படமாக மாறும். இந்தி படத்தில் நடித்துத்தான் அப்படியான ஒரு சந்தையை உருவாக்க வேண்டும் என்றில்லை. இப்போது ராஜமௌலி ஒரு தெலுங்குப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் சந்தையை வைத்துப் பார்க்கும்போது அது தேசிய அளவில் அனைத்துத் தரப்புக்குமான படம்” என்று தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x