Published : 30 Dec 2019 04:49 PM
Last Updated : 30 Dec 2019 04:49 PM

பெயரைக் கெடுக்கத் திட்டம்; ஆதாரமில்லா புரளி: தயாரிப்பாளரைத் தாக்கியது தொடர்பாக சஞ்சனா கல்ராணி விளக்கம்

என் பெயரைக் கெடுக்க அவரது திட்டம், அவர் பரப்பும் ஆதாரமில்லா புரளி என்று தயாரிப்பாளரைத் தாக்கியது தொடர்பாக சஞ்சனா கல்ராணி விளக்கமளித்துள்ளார்.

பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. இவரும் நடிகையாக அறிமுகமாகி தமிழில் அருண் விஜய் நடிக்கவுள்ள 'பாக்ஸர்' படத்திலும், விஜய் டிவி ராமர் நடிக்கும் 'போடா முண்டம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையில் ஒன்றில் சிக்கியுள்ளார் சஞ்சனா கல்ராணி.

பெங்களூருவில் நடந்த விருந்தொன்றில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, தயாரிப்பாளர் வந்தானா ஜெயினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதனைத் தொடர்ந்து பீர் பாட்டில் ஒன்றின் மூலம் அவரை தாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையில் வாக்குவாதம் நடந்தது உண்மை என்றும், ஆனால் பாட்டிலால் தாக்கவில்லை என்று சஞ்சனா காவல்துறையினரிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை என்பதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விளக்கம் ஒன்றை கடிதமாகத் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் சஞ்சனா கல்ராணி. அதில் அவர் கூறியிருப்பதாவது:

சுற்றிக்கொண்டிருக்கும் தகவல்கள் எல்லாம் அடிப்படையில்லாத வதந்திகளே. என்னை குற்றம்சாட்டிக் கொண்டிருக்கும் அந்த இன்னொரு பெண்ணிடம் எந்த விதமான ஆதாரமும் இல்லை. என் அம்மாவையும் என் குடும்பத்தையும் அப்படி மோசமான வார்த்தைகளால் ஏசினார் அதை என்னால் இங்குக் குறிப்பிடக்கூட முடியாது. நான் பதிலுக்கு என்னிடமிருந்து விலகி இரு என்று கத்தினேன். அவர் உடனே என்னைக் கைது செய்து, என் திரை வாழ்க்கையை முடக்கி, என் பெயரைக் கெடுத்து, என்னை சிறையில் அடைத்து, என் மொத்த குடும்பத்தையும் முடித்துவிடுவதாக மிரட்டினார்.

இவர் நான் தொடர்பில் இருக்க விரும்பாத, எப்போதும் விளம்பரத்துக்காக அற்பமான வழிகளைத் தேடும் ஒருவர். ஒரு முடிவுக்கு வரும் முன் அவரைப் பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள். கடந்த 10 வருடங்களாக நான் இந்தத் துறையில் மிக மிகக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்குப் படங்களில் வேலை செய்வது மட்டுமே தெரியும். வேறெதுவும் தெரியாது. நான் இந்த சர்ச்சைக்குள் இழுக்கப்பட்டு, அவதூறு பேசப்பட்டு, இலக்காக்கப்பட்டுள்ளேன்.

அந்தப் பெண் எனது மொபைலைப் பறித்து என்னை முரட்டுத்தனமாக நடத்தி, என் கையை முறுக்கி இருக்கும் வீடியோவே ஒரு ஆதாரம். அவரது முகத்திலோ தலையிலோ காயப்பட்டிருப்பது போல அந்த வீடியோவில் தெரிகிறதா? விஸ்கி பாட்டில் உடைக்கப்பட்டிருந்தால் அதற்கான அறிகுறி, இரத்தக் கறை இருக்காதா? அப்படியான ஒரு பொறுப்பற்ற செயலை என் ஒட்டு மொத்த வாழ்விலும் நான் செய்ய மாட்டேன். இது எனது பெயரைக் கெடுக்க அவரது திட்டம், அவர் பரப்பும் ஆதாரமில்லா புரளி.

நான் மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேச விரும்பவில்லை. ஆனால் இந்தப் பெண், இந்தியக் கிரிக்கெட் சுழற்பந்துவீச்சாளர் ஒருவர், புகழின் உச்சியில் இருக்கும் போது அவரை இலக்காக்கி, அவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி மிரட்டியவர். அவர் மறுத்தபோது அவரை பற்றி அவதூறு பேசி, இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கச் செய்து பணத்தையும் பிடுங்கிக் கொண்டார்.

நான் இந்தப் பெண்மணியிடம் சிக்கியிருக்கிறேன். தயவு செய்து எனக்கு ஆதரவும் கொடுங்கள். ஆதாரமில்லாத எந்த செய்தியையும் உங்கள் ஊடகங்களில் கொண்டு வராதீர்கள். அவதூறிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். இந்த அசிங்கமான சண்டையை நான் தொடர விரும்பவில்லை. நானும், என் மொத்த குடும்பமும் போலீஸ் பாதுகாப்புக்காகக் கேட்டிருக்கிறோம். எனக்கு இந்த முக்கியமான நேரத்தில் ஆதரவு தந்த பெங்களூரு காவல்துறைக்கு நன்றி.

இவ்வாறு சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x