Published : 14 Nov 2018 12:16 PM
Last Updated : 14 Nov 2018 12:16 PM

ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் வெளியான ‘டாக்ஸிவாலா’: தெலுங்கு திரையுலகினர் பெரும் அதிர்ச்சி

பட வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில்  ‘டாக்ஸிவாலா’ திரைப்படம் வெளியானதால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நவம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘டாக்ஸிவாலா’. ராகுல் சங்கிரிட்யான் இயக்கியுள்ள இப்படத்தை ஃபன்னி வாஸ், வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பிரமோத் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால், நீண்ட நாட்களாக தயாரிப்பிலிருந்து இப்போது தான் வெளியீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ‘டாக்ஸிவாலா’ படத்தை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. ''பல மாதங்களுக்கு முன்பே இப்படம் எங்கள் கையில் வந்தது. படம் திரைக்கு வந்து 2 வாரங்கள் கழித்து வெளியிடலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தோம். சிலரது செயல்பாடுகளால் இப்போதே வெளியிட்டு விட்டோம். இதற்கு வருந்துகிறோம்'' என்று இப்படத்தை வெளியிட்ட இணையத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு முன்னணி நடிகரின் படம் திரைக்கு வரும் முன்பே திருட்டுத்தனமாக வெளியாகியிருப்பதால், தெலுங்கு திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், முன்னணி நடிகர்கள் பலரும் இப்படத்தை மக்கள் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தரும்படி தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இப்படம் சில இணையதளங்களிலிருந்து நீக்கப்பட்டாலும், அனைத்திலுமிருந்து நீக்க பல்வேறு முயற்சிகளை ‘டாக்ஸிவாலா’ படக்குழு எடுத்து வருகிறது. மேலும், வரும் 17-ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த ‘டாக்ஸிவாலா’16-ம் தேதியே ரிலீஸ் ஆக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x