Published : 13 Aug 2018 05:50 PM
Last Updated : 13 Aug 2018 05:50 PM

கேரளாவில் வெள்ளப் பாதிப்பு: அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, 25 லட்ச ரூபாய் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.

கேரளாவில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்குப் பெருமழை பெய்துள்ளது. 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. 8,316 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.1924-ம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவரான மம்மூட்டி 15 லட்ச ரூபாயும், அவருடைய மகனும் நடிகருமான துல்கர் சல்மான் 10 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளனர். இதேபோல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவருடைய கணவர் ராஜ்குமார் சேதுபதி இணைந்து 10 லட்ச ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இவை அனைத்துமே முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள வெள்ளப் பாதிப்புக்காக 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். “அளவில்லாத அன்பால் கேரள மக்களுக்கு எப்போதுமே என் இதயத்தில் தனியிடம் உண்டு. அவர்களுடைய அன்பைப் போலவே, வெள்ளச்சேதமும் ஈடு செய்ய முடியாதது. ஆனாலும், என்னாலான சிறிய உதவி இது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x