Published : 20 Sep 2024 05:05 PM
Last Updated : 20 Sep 2024 05:05 PM

பாலியல் புகாரில் கைது: நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு நீதிமன்ற காவல்

ஹைதராபாத்: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான ஷேக் ஜானி பாஷா (எ) ஜானிமாஸ்டர் தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ உட்பட பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அவரது குழுவில் பணியாற்றும் 21 வயது பெண் நடன கலைஞருக்கு ஜானி பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் ஹைதராபாத் போலீஸில் புகார் அளி்க்கப்பட்டது.

அதில் அந்தப் பெண், “கடந்த 2019-ம் ஆண்டு ஜானி மாஸ்டர், எனக்கு உதவி நடன இயக்குநர் வேலை கொடுத்தார். படப்பிடிப்புக்காக சென்னை, மும்பைக்கு சென்றிருந்தோம். அப்போது 18 வயது நிரம்பாத நிலையில், திருமண ஆசை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து போலீஸார் ஜானி மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அவரை இடை நீக்கம் செய்த நிலையில், ஜன சேனா கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்ப‌ட்டார்.

தலைமறைவாக இருந்த ஜானியை தெலங்கானா போலீஸார் நேற்று (செப்.20) கைது செய்தனர். இந்த நிலையில் ஹைதரபாத் உப்பரப்பள்ளி நீதிமன்றத்தில் ஜானி ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்படுவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x