Published : 13 Aug 2024 05:59 PM
Last Updated : 13 Aug 2024 05:59 PM

“தென்னிந்திய சினிமா அற்புதமானது” - சர்வதேச பட விழாவில் ஷாருக்கான் புகழாரம்

சுவிட்சர்லாந்து: “உண்மையில் திரைப்படங்களாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தென்னிந்திய சினிமா மிக மிக அற்புதமானது. இந்தி - தென்னிந்திய இணைவின் முக்கிய படமான ‘ஜவான்’ எல்லைகளைத் தாண்டி வரவேற்பை பெற்று வசூலை ஈட்டியது. இந்தியாவில் சிறந்த கதை சொல்லும் பகுதிகளாக நான் தென்னிந்தியாவை கருதுகிறேன்” என லோகார்னோ பட விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தென்னிந்தியாவை புகழ்ந்து பேசியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் ‘லோகார்னோ திரைப்பட விழா’ நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 77-வது திரைப்பட விழா வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான ‘Pardo alla Carriera Ascona’ எனப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஜியோனா ஏ.நாசரோவுடனான கலந்துரையாடலின் போது ஷாருக்கான் கூறுகையில், “இந்தியா பரந்து விரிந்த பல மொழிகளைக் கொண்ட நாடு. தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி என பல மொழிகள் உள்ளன. அவையெல்லாம் சேர்ந்தது தான் இந்திய சினிமா. இந்தியாவில் சிறந்த கதை சொல்லும் பகுதிகளாக நான் தென்னிந்தியாவை கருதுகிறேன். அவர்களிடம் அட்டகாசமான கதைகள் உண்டு. மேலும், அவர்கள் சிறந்த கதை சொல்லல் பாணியையும் பின்பற்றி வருகின்றனர்.

மலையாள சினிமா, தெலுங்கு சினிமா, தமிழ் சினிமாவில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்கள் இருப்பது நாம் எல்லோரும் தெரியும். இந்தியாவில் வெளியான ‘ஜவான்’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களின் வெற்றி அனைவரையும் உற்று கவனிக்க வைத்துள்ளது. உண்மையில் திரைப்படங்களாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தென்னிந்திய சினிமா மிக மிக அற்புதமானது. இயக்குநர் மணிரத்னத்துடன் ‘தில் சே’ படத்தில் பணியாற்றிய பிறகு தென்னிந்திய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அவர்களிடம் வித்தியாசமான கதை சொல்லல் முறை உள்ளது” என்றார்.

மேலும் அட்லீயுடன் ‘ஜவான்’ படத்தில் பணியாற்றியது குறித்து அவர் பேசுகையில், “தொடக்கத்தில் அவருடன் பணியாற்றிய போது மொழிப் பிரச்சினை இருந்தது. ஆனால் நாங்கள் பழக ஆரம்பித்த பிறகு தடை நீங்கியது. அட்லீ நல்ல பையன். படப்பிடிப்பின்போது அவருக்கு குழந்தை பிறந்தது. அவர் தனது குழந்தைக்கு ‘மீர்’ என என்னுடைய தந்தையை பெயரை சூட்டியது நெகிழ்ச்சி அளித்தது.

நாங்கள் பெரும்பாலும் கைகுலுக்கிக் கொண்டு, இட்லி, தோசை, சில்லி சிக்கன் சாப்பிட்டபடியே மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். இந்தப் படத்தை இந்தி - தென்னிந்திய சினிமாவின் முக்கியமான இணைவாக கருதுகிறேன். இது அனைத்து விதமான எல்லைகளையும் கடந்து வியாபார ரீதியாக நல்ல வசூல் ஈட்டியது. மேலும் அனைத்து மக்களாலும் விரும்பப்பட்ட படமாக மாறியது. எனவே இது எனக்கு சிறப்பான அனுபவமாக அமைந்தது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x