Published : 31 May 2024 03:52 PM
Last Updated : 31 May 2024 03:52 PM

“பரஸ்பர மரியாதையை பேணி வருகிறோம்” - பாலகிருஷ்ணா குறித்து நடிகை அஞ்சலி

ஹைதராபாத்: “பாலகிருஷ்ணாவும் நானும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையை எப்போதும் பேணி வருகிறோம்” என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ பட நிகழ்வின்போது மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை தள்ளிய வீடியோ வைரலானதை தொடர்ந்து நடிகை அஞ்சலியின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தள பக்கத்தில், “கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலகிருஷ்ணாவும் நானும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையை எப்போதும் பேணி வருகிறோம் என்பதையும், நீண்ட காலமாக நல்ல நட்புடன் இருந்து வருகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

பின்னணி: விஸ்வக் சென் நடிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள படம் ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’. இதில் அஞ்சலி, நேஹா ஷெட்டி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு கடந்த 28-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா அங்கே நின்று கொண்டிருந்த அஞ்சலி, நேஹா ஷெட்டி இருவரையும் தள்ளி நிற்க சொன்னார். ஆனால் இருவரும் அதை கவனிக்காமல் இருந்ததால் தனது அருகில் நின்ற அஞ்சலியை பிடித்து தள்ளினார். ஒரு நிமிடம் தடுமாறிய அஞ்சலி, பின்னர் சுதாரித்துக் கொண்டு சிரித்தார். கீழே அமர்ந்திருந்த ரசிகர்கள் கூட்டமும் இதை பார்த்து ஆராவாரம் செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் பாலகிருஷ்ணாவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அஞ்சலி அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிரித்தாலும், மேடையில் பாலகிருஷ்ணா இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று விமர்சித்தனர். இன்னொரு பக்கம் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள், அவர் இதனை விளையாட்டாக செய்ததாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை அஞ்சலி வைரல் வீடியோ தொடர்பாக தனது கருத்தை வெளிப்படையாக கூறாவிட்டாலும், சூசகமாக தானும், பாலகிருஷ்ணாவும் நல்ல நட்புடன் இருக்கிறோம் என்பதை தெரிவித்து நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

— Anjali (@yoursanjali) May 30, 2024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x