‘பிரமயுகம்’ படத்தில் ஹீரோவோ, வில்லன்களோ இல்லை: மம்மூட்டி

‘பிரமயுகம்’ படத்தில் ஹீரோவோ, வில்லன்களோ இல்லை: மம்மூட்டி

Published on

கொச்சி: “படத்தில் ஹீரோக்களோ, வில்லன்களோ இல்லை. முழுவதுமே கதாபாத்திரங்கள் தான்” என்று ‘பிரமயுகம்’ படம் குறித்து மம்மூட்டி தெரிவித்துள்ளார்.

மம்மூட்டி நடிப்பில் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘பிரமயுகம்’. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தத நடிகர் மம்மூட்டி, “ஷேக்ஸ்பியர் நாடகங்களில் ஹீரோ, வில்லன்கள் இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அப்படி யாரும் இல்லை. காரணம், எதிர்மறையான குணாதியசங்களைக் கொண்டவர்கள், வில்லன்களாக சித்தரிக்கப்படாத காலக்கட்டம் என்பதால் ஹீரோ - வில்லன்கள் படத்தில் இல்லை.

என்னுடைய கதாபாத்திரம் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட மர்மம் நிறைந்த கதாபாத்திரமாக இருக்கும். அது குறித்து நிறைய சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் அது பார்வையாளர்களின் திரையனுபவத்தை பாதிக்கும். கடந்த காலத்தில் ஏராளமான கருப்பு - வெள்ளை படங்களைப் பார்த்திருப்போம். ப்ளாஷ் பேக் காட்சிகளுக்கு கருப்பு வெள்ளை கலர் டோன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நிறைய பேர் இன்றும் அதனை பின்பற்றுகிறார்கள். ஆனால், முழுக்க முழுக்க கருப்பு- வெள்ளையில் உருவாகியிருக்கும் படத்தை பார்க்கும் இன்றைய தலைமுறையினருக்கு இது புதுவித அனுபவமாக இருக்கும். அவர்கள் இதற்கு முன் திரையரங்கில் இந்த கலரில் படத்தை பார்த்திருக்கமாட்டார்கள்.

முற்றிலும் புதிய கதையைச் சொல்வதைப் போலவே, பழக்கமான கதையால் பார்வையாளர்களைக் கவருவது கடினம். எனது முந்தைய படங்களிலிருந்து விலகி புதிய கதைக்களத்தில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன்” என்றார். ‘இது ஒரு டைம் லூப் படமா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் ராகுல் சதாசிவம், “இது ஒரு பரிசோதனை முயற்சிக்கான படம். டைம் லூப் படமல்ல” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in