Published : 27 Feb 2017 11:47 AM
Last Updated : 27 Feb 2017 11:47 AM
ஆஸ்கர் விழாவின் தொகுப்பாளர் மேடையிலேயே அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கிண்டல் செய்து ட்வீட் செய்தது சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்து முடிந்தது. விழாவின் தொகுப்பாளர் ஜிம்மி கிமெல் மேடையிலேயெ அதிபர் ட்ரம்பை சீண்டி ஒரு ட்வீட் செய்தார். விழா ஆரம்பித்து சில மணி நேரங்கள் கழித்து, மேடைக்கு வந்த கிமெல், "விழா ஆரம்பித்து 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் ட்ரம்ப் இன்னும் எதுவும் ட்வீட் செய்யவில்லை. எனக்கு கவலையாக இருக்கிறது" என சொல்லிவிட்டு தனது மொபைல் திரையை மேடையில் இருக்கும் பெரிய திரையில் காண்பிக்கச் சொன்னார்.
அதில், ட்விட்டரில் டொனால்ட் ட்ரம்பைக் குறிப்பிட்டு நீங்கள் இன்னும் கண் விழிக்கவில்லையா எனக் கேட்டிருந்தார். அடுத்த ட்விட்டீல், மெரில் ஸ்ட்ரீப் உங்களுக்கு ஹாய் சொன்னார் என்று குறிப்பிட்டார். ஏனென்றால் இதற்கு முன் மெரில் ஸ்ட்ரீப்பை சுமாரான நடிகை என ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.
முன்னதாக நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, "இந்த விழா நேரலையாக 225 நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்படுகிறது. இப்போது அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள். நான் அதிபர் ட்ரம்புக்கு நன்றி கூற விரும்புகிறேன். சென்ற வருட ஆஸ்கரில் இன பேதம் அதிகமிருந்ததாக சர்ச்சை எழுந்தது. தற்போது இல்லை. அவருக்கு நன்றி " என்றார்
மேடையிலேயே அதிபருக்கு ட்வீட் செய்யு ஜிம்மி கிமெல் | படம்:நியூயார்க் டைம்ஸ் |
ஆளுநர்களுடன் டின்னர் சாப்பிட இருப்பதால், டொனால்ட் ட்ரம்ப் ஆஸ்கர் விழாவை பார்க்க மாட்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஷான் ஸ்பைஸர் வியாழக்கிழமையே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment