Last Updated : 17 Jul, 2022 10:50 AM

 

Published : 17 Jul 2022 10:50 AM
Last Updated : 17 Jul 2022 10:50 AM

முதல் பார்வை | சபாஷ் மிது - இந்திய கிரிக்கெட் உலகின் இன்னொரு முகம்

ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட் உலகில் பெண்ணொருத்தி பிரவேசிக்க முயன்றாள் என்னென்ன சவால்களை சந்திக்க நேரிடும் என்பது தான் 'சபாஷ்மிது'.

ஹைதராபாத்தில் உள்ள தமிழ் குடும்பத்தில் பிறந்த மிதாலி ராஜூக்கு, தோழி ஒருத்தியின் மூலம் சிறுவயதிலேயே கிரிக்கெட் அறிமுகமாகிவிடுகிறது. தொடர் பயிற்சியுடன் அயராத உழைப்பை முதலீடாக்கி களமாடுகிறார். அதன் எதிரொலியாக இந்திய பெண்கள் அணியின் கேப்டன் பதவி அவரைத் தேடி வர, பெண்களுக்கான கிரிக்கெட் அணியை கட்டமைக்கிறார். ஆண்களுக்கான விளையாட்டு என நம்பப்படும் கிரிக்கெட்டில் பெண்களுக்கான அணியை அடையாளப்படுத்த அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவால்களும், தடைகளும் தான் 'சபாஷ் மித்து'.

மிதாலி ராஜாக டாப்ஸி. படத்திற்காக நிறையவே மெனக்கிட்டிருக்கிறார். உடல் எடையை குறைத்து, கூட்டி, ஃபுட் வொர்க், கவர் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பேட்டிங் டெக்னிக்குகளை பழகி படத்திற்காக அவர் செலுத்தியுள்ள உழைப்பு திரையில் டாப்ஸியை மறைத்து மிதாலியை நினைவூட்டுகிறது. வசனங்களின் துணையில்லாமலேயே சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளை முகபாவனைகளால் எதார்த்தமாக பிரதிபலிக்கிறார்.

அதேபோல, அவரின் சிறுவயது கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் இனயத் வர்மா அட்டகாசமாக நடித்திருந்தார். அவரது தோழியாக வரும் கஸ்தூரி ஜக்னமின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. பயிற்சியாளராக வரும் விஜய் ராஜ் பொருத்தமான தேர்வு. மற்ற நடிகர்கள் அனைவரும் இயல்பாக நடித்திருந்தது படத்துடன் ஒன்ற பெரும் உதவியாக இருந்தது. இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசித் முகர்ஜி.

சிஏஐ அதிகாரி ஒருவர் அங்கு வேலைப்பார்க்கும் பியூனை அழைத்து, 'உங்களுக்கு தெரிஞ்ச பெண் கிரிக்கெட் வீராங்கனை பேர் சொல்லுங்க?' என கேட்க அந்த பியூன் பதில் தெரியாமல் முழிக்கிறார். படம் பார்க்கும் நாமும் கூட. அது ஒரு முக்கியமான கேள்வி. அந்த பியூன் கிரிக்கெட்டை உயிர் மூச்சாக கொண்டவர். ஆனால், பதில் இல்லை. இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம். ஆனால், அந்த மதத்தில் ஆண்கள் மட்டுமே கடவுளர்கள். பெண்களுக்கு எந்த இடமும் இல்லை. படம் அது குறித்து அழுத்தமாக பேசுவது பாராட்டுக்குரியது. அதேபோல, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் டாப்ஸியிடம், 'உங்களுக்கு பிடிச்ச ஆண் கிரிக்கெட்டர் பேர் சொல்லுங்க' என கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அவர், 'அவங்க கிட்ட போய்டு இந்த கேள்விய கேட்டுட்டு வாங்க'' என்ற வசனம் நச்.

உண்மையில் மிதாலி ராஜூம் கூட இதை உடைக்கத்தான் போராடியிருக்கிறார். அந்த போராட்டத்தை காட்சிப்படுத்திய விதம், பார்வையாளர்களை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஓரிடத்தில் விமானத்தில் செல்ல தயாராகிக்கொண்டிருக்கும் இந்திய பெண்கள் அணிக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவர்கள் தவித்துக்கொண்டிருப்பார்கள். அதே இடத்தில் உரிய காவல்துறை பாதுகாப்புடன் ஆரவாரத்துடன் ஆண்கள் கிரிக்கெட் அணியினர் கெத்தான நடந்து செல்லும் காட்சி பாலின பாகுபாட்டை அழுத்தமாக முன்வைக்கும்.

முதலில் பெண் கிரிக்கெட்டர் ஒருவரின் வாழ்க்கையை வரலாற்றை திரையில் ஆவணப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி பாராட்டப்பட வேண்டியது. பெண்கள் கிரிக்கெட் அணியினரிடம் போராட்டம், சவால்கள், தடைகள், பாகுபாடு, வலி என அனைத்தும் படம் பார்ப்பவர்களுக்கு கிரிக்கெட் உலகில் நிகழும் பல்வேறு சிக்கல்களை புரியவைக்கிறது. படத்தின் கிரிக்கெட் தொடர்பான காட்சிகள் நன்றாகவே வந்திருக்கின்றன.

கூடுதல் பாடல்கள் திரைக்கதை மேம்படுத்த எந்த வகையிலும் உதவவில்லை.மாறாக அதன் வேகத்தையே குறைக்கின்றன. படத்தின் தேவைக்கு அதிகமான நீளம் சோர்வைத்தருகிறது. பொதுவாக விளையாட்டு சார்ந்த படங்களில் சீட்டுக்கு நுனியில் அமர்ந்து பார்க்கும் வகையில் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து ஸ்கோர் செய்வார்கள். ஆனால், இதில் களத்தில் மிதாலி எடுக்கும் ஸ்கோர் அளவுக்கு கூட படம் சுவாரஸ்யத்தில் ஸ்கோர் செய்யவில்லை.

தவிர, படத்தின் இறுதி காட்சியும், ஒவ்வொரு பெண் வீராங்கனைகளின் குடும்ப பின்னணியை பதிவு செய்த விதமும் பலம் சேர்க்கிறது. இசையமைப்பாளர் அமீர் திரிவேதி பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், இன்னும் மெனக்கெட்டிருந்தால் நல்ல ஆல்பமாக வந்திருக்கும். சிர்ஷா ரேவின் ஒளிப்பதிவில் கிரிக்கெட் பயிற்சி காட்சிகள் ஈர்க்கின்றன.

மொத்தத்தில், பெண்கள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சமகால வீராங்கனைகளில் ஒருவரான மிதாலி ராஜையும், கிரிக்கெட் உலகில் நிகழும் பாலின பாகுபாடு குறித்து அறிந்து கொள்ள படத்தை பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x