Published : 27 Apr 2017 07:14 PM
Last Updated : 27 Apr 2017 07:14 PM

இந்தியத் திரையுலகில் சாதனை படைக்குமா பாகுபலி 2?

'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2'க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி 2'-வில் விடை தெரியவிருக்கிறது. ஏப்ரல் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வரும் 'பாகுபலி 2', இந்தியத் திரையுலகில் இதுவரை உள்ள வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்று திரையுலக வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் 'பாகுபலி' முதல் பாகம், முதல் நாள் வசூலாக 75 கோடியைத் தொட்டது. இந்தியாவில் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியானது. ஆனால், 'பாகுபலி 2' இந்தியாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. சுமார் 8000-த்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் இந்தியப் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக வர்த்தகர்கள் தரப்பில் கூறுகையில், "'பாகுபலி 2' படத்துக்கான முன்பதிவைக் காணும் போது, முதல் நாள் வசூல் அனைத்து மொழிகளையும் சேர்த்து 85 கோடியைத் தாண்டும் என உறுதியாகச் சொல்லலாம். தெலுங்கு நாயகர்கள் முதன்மையாக நடித்திருப்பதால், அங்கு மட்டும் முதல் நாள் வசூல் 25 கோடியைத் தொடலாம்.

இந்தியிலும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாவதால் அங்கு 30 கோடியைத் தொடலாம். தமிழ், மலையாளம், கர்நாடகா ஆகிய மொழிகளைச் சேர்த்தால் 30 கோடியைத் தொடலாம். ஆகவே மொத்தம் முதல் நாள் வசூலாகச் சுமார் 85 - 90 கோடி வரை முதல் நாள் வசூல் செய்து சாதனை படைக்கும்" என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் 'எந்திரன்' சாதனையை முறியடிக்குமா?

இப்படம் கண்டிப்பாக 'எந்திரன்' படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று முன்னணி விநியோகஸ்தர் தெரிவித்தார். இது குறித்து "’எந்திரன்’ படத்தின் வசூலில் திரையரங்கத்துக்கான பங்கு போகத் தயாரிப்பாளருக்குச் சுமார் 50 கோடி ரூபாய் கிடைத்தது. தமிழகத் திரையரங்க உரிமை வசூலில் இச்சாதனையை இன்னும் எந்ததொரு படமும் தாண்டவில்லை. இதனை 'பாகுபலி 2' கண்டிப்பாகத் தாண்டும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழக மக்களிடையே இப்படம் கண்டிப்பாகத் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. மேலும், திரையரங்க உரிமையாளர்களும் ஏப்ரல் 28-ம் தேதி 'பாகுபலி 2' க்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். ஏப்ரல் 28-ம் தேதியிலிருந்து மே 12-ம் தேதி வரை வேறு எந்ததொரு படமும் வெளியீட்டை உறுதிப்படுத்தவில்லை. ஆகையால் சுமார் 2 வாரங்கள் இடைவெளியிருப்பதால் கண்டிப்பாக 'எந்திரன்' சாதனையை முறியடிக்கும் என நம்பலாம்" என்று தெரிவித்தார்.

வெளியீட்டுக்கு முன்பே 500 கோடி வருவாய்

450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தொலைக்காட்சி உரிமை, வெளியீட்டு உரிமை, விளம்பரங்கள் உரிமை உள்ளிட்டவற்றின் மூலம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அமீர்கானின் 'தங்கல்' படத்தின் வசூல் சாதனையை கண்டிப்பாக 'பாகுபலி 2' முறியடிப்பதில் சந்தேகமில்லை என்றும் பாலிவுட் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x