Last Updated : 05 Sep, 2024 09:52 AM

 

Published : 05 Sep 2024 09:52 AM
Last Updated : 05 Sep 2024 09:52 AM

இந்தியில் வெளியாகாத ‘தி கோட்’ - பின்னணி என்ன?

இந்தியில் உள்ள ஓடிடி விதிமுறைகள் சிக்கலால் ‘தி கோட்’ படம் வெளியாகவில்லை. இதனால், படத்தின் வசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்தப் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ‘தி கோட்’ வெளியாகி இருக்கிறது. ஆனால், திட்டமிட்டப்படி இந்தியில் படம் வெளியாகவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துவிட்டது.

இந்தியில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளின் ஆதிக்கம்தான் அதிகம். அங்கு ஒரு படத்தை வெளியிட வேண்டுமென்றால், 8 வாரங்களுக்கு பின்பு தான் ஓடிடியில் வெளியிடுவோம் என்ற நிபந்தனைக்கு கட்டுப்பட வேண்டும். அப்படி ஒத்துவராத எந்தவொரு படத்தையும் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியிட முடியாது.

ஓடிடி விற்பனை முடிந்துவிட்டாலும் 8 வாரங்கள் காத்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அர்ச்சனா கல்பாத்தி மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், 8 வாரங்கள் கழித்து ஓடிடி வெளியீடு என்றால் வெளியிடுகிறோம் என கூறிவிட்டார்கள். இதனால் இந்தியில் ‘கோட்’ வெளியாகவில்லை.

தென்னிந்தியாவில் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இந்தி பதிப்பு அல்லாமல் இதர பதிப்புகளில் மட்டுமே ‘தி கோட்’ வெளியாகி இருக்கிறது. இந்தியில் வெளியாகாத காரணத்தினால் ‘கோட்’ படத்துக்கு வசூல் பாதிப்பு இருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x