Published : 12 Jul 2024 05:07 PM
Last Updated : 12 Jul 2024 05:07 PM

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதி

மும்பை: பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படம் இந்தியில் ‘சர்ஃபிரா’ (Sarfira) என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இந்தியிலும் சுதா கொங்கராவே இப்படத்தை இயக்கியுள்ளார். அக்‌ஷய் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக ஈடுப்பட்டு வந்தார் நடிகர் அக்‌ஷய் குமார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டது. மேலும் புரமோஷன் குழுவில் இருந்தவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நடிகர் அக்‌ஷய் குமார் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கும் கரோனா இருப்பது வெள்ளிக்கிழமை காலை உறுதியானது. இதனால் உடனே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். படம் வெளியான இன்று அவரால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை.

மேலும், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் இன்று மும்பையில் கோலாகலமாக நடைபெறுகிறது. ஆனந்த் அம்பானி அக்‌ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்புவிடுத்தார். ஆனால், தற்போது கரோனா பாதிப்பு காரணமாக அக்‌ஷய் குமாரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. முன்னதாக அவர் கடந்த 2022-ம் ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x