Published : 18 Jan 2024 05:58 PM
Last Updated : 18 Jan 2024 05:58 PM

“ஷாருக், சல்மான், ஆமிர்கானுக்குப் பிறகு...” - கரண் ஜோஹரின் ‘சூப்பர் ஸ்டார்’ கணிப்பு

மும்பை: “பாலிவுட்டில் ஷாருக்,சல்மான், ஆமிர் என மூன்று கான்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் என்ற கருத்துருவாக்கம் இல்லாமல் போகலாம்” என இயக்குநர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் ஆகிய மூன்று கான்களுக்குப் பிறகான தலைமுறையில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற கருத்துருவாக்கம் இல்லாமல் போகலாம். என்னைப் பொறுத்தவரை இந்த மூன்று கான்களுக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பதமும் இருக்கப்போவதில்லை. ஒரு கட்டம் வரை பிரபலம் என்று அறியப்படுபவர்கள் திரைப்பட நட்சத்திரங்களாகவும், கிரிக்கெட் வீரர்களாகவும் இருந்தார்கள்.

ஆனால், இன்று இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள், ஃபுட் வ்லாக்கர்கள், ஃபேஷன் இன்ஃப்ளூயன்சர்கள் தான் பிரபலங்களாக அறியப்படுகிறார்கள். ஷாருக், சல்மான், ஆமிர், ஹிருத்திக் ரோஷன், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், கரீனா கபூர், ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோருக்கு நாடு முழுவதும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இன்றைய தலைமுறையில் அப்படியான ஒரு ரசிக மனப்பான்மையை உருவாக்குவது மிகவும் கடினம்” என்றார்.

மேலும், ஷாருக்கான் குறித்து பேசுகையில், “ஷாருக்கானைக் காட்டிலும், புத்திசாலித்தனமான, வசீகரிக்கும் ஆளுமை திறன் கொண்ட ஒருவர் இருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. அந்த கம்பீரமான ஈர்ப்பு அவரிடம் மட்டுமே உள்ளது. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எதிர்காலத்தில் பல நடிகர்கள் வரலாம். ஆனால் அவர்களால் ஷாருக்கானின் இடத்தை பிடிக்க முடியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x