Published : 26 Feb 2023 05:14 PM
Last Updated : 26 Feb 2023 05:14 PM

முதல் திரைப்படம் வெளியாகும் முன்பே உயிரிழந்த மலையாள இயக்குநர் மனு ஜேம்ஸ்

‘நான்சி ராணி’ படத்தின் இயக்குநரான மனு ஜேம்ஸ், தனது அந்த முதல் படம் வெளியாகும் முன்பாகவே நேற்று காலமானார். அவருக்கு வயது 31.

‘ஐ எம் க்யூரியஸ்’ படத்தின் மூலம் கடந்த 2004-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர் மனு ஜேம்ஸ். பின்னர், மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் உதவி இயக்குநராக இவர் பணியாற்றினார். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப்பின் தனது கனவு திரைப்படமான ‘நான்சி ராணி’ படத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.

படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அஹானா கிருஷ்ணா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சன்னி வெய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லீனா மற்றும் லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் மஞ்சள் காமாலை நோய் காரணமாக கேரளாவின் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த மனு ஜேம்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது, அவரது படக்குழுவினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனு ஜேம்ஸ் மறைவு குறித்து ‘நான்சி ராணி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் டபிள்யூ வர்கீஸ் தனது பதிவில், “மனமும் உடலும் நடுங்குகிறது. ஒருநாள் தற்செயலாக மனுவை சந்திந்தேன். அந்த அறிமுகமே எங்களுக்குள் ஆன்ம பந்தமாக மாறியது. அது என்னை ‘நான்சி ராணி’ படத்தின் ஒரு அங்கமாக மாற்றியது. அந்த மனு இப்போது காலமாகிட்டார்'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x