Published : 28 Dec 2022 02:29 PM
Last Updated : 28 Dec 2022 02:29 PM

“யோகிபாபு வெறும் காமெடி நடிகரல்ல” - தங்கர் பச்சான் சிலாகிப்பு

‘படத்தில் ராமநாதன் என்ற பாத்திரத்தில் பாரதிராஜாதான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது’ என படத்தின் இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய தங்கர் பச்சான், “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் படப்பிடிப்பு 4 நாட்களில் முடிவடைந்து விடும். எப்போதோ முடிந்திருக்க வேண்டியது, சிறு தடங்களால் தாமதமாகிவிட்டது. இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறேன். ஒளிப்பதிவு பணிகள் என்று இந்த படத்தையும் சேர்த்து மொத்தம் 53 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். நினைப்பதை எடுக்கும் சூழல் இன்னும் இங்கு வரவில்லை, இந்தப் படத்தில் அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.

ஒரு இயல்பான வாழ்க்கையைப் பார்த்த அனுபவம், படம் பார்ப்பவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால், உண்மைக்கு மாறாக சினிமாக்களை உருவாக்கி மக்களை திசை திருப்புகிறது என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது. இப்படம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 2006 ஆம் ஆண்டு இந்த கதை எழுதப்பட்டது. ஒவ்வொரு முறை முயற்சி செய்தும் படமாக்க வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

படத்தில் ராமநாதன் என்ற பாத்திரத்தில் பாரதிராஜா தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. அவர் இல்லையென்றால் இந்த படமே எடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். அவரிடம் கதையைக் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார்.

யோகிபாபுவை நகைச்சுவை நடிகர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை உடைக்கும் வகையிலான கதாபாத்திரம். அவர் எப்படி நடிக்க போகிறார்? என்று நினைத்தேன். எள்ளளவும் நகைச்சுவை இல்லாத பாத்திரம், ஏற்கெனவே 15 படங்கள் உங்களுக்கு இருக்கிறது. இப்படத்திற்கு நிறைய நாட்கள் தேவைப்படும் என்றேன். கதையைக் கேட்டுவிட்டு உருகிவிட்டார். கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதன்பிறகு தான் படமாக தொடங்கியது.

கோமகன் என்ற பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கிறார். இதுவரை நீங்கள் பார்க்காத கௌதம் மேனனை இப்படத்தில் பார்ப்பீர்கள். அடுத்தது பெண் கதாபாத்திரத்திற்கு அதிதி பாலனை தேர்ந்தெடுத்தோம். ‘அழகி’ நந்திதா தாஸிடம் ஏற்பட்ட அனுபவம் தான் அவரிடம் ஏற்பட்டது. ஏனென்றால், இந்த கதாபாத்திரத்தை சாதாரணமாக யாரும் நடித்திட முடியாது. இலக்கிய சிந்தனையும் அனுபவம் முதிர்ச்சியும் இருந்தால் தான் இந்த பாத்திரத்தில் நடிக்க முடியும். அதிதி அதற்கு பொருத்தமாக இருந்தார். எப்போதும் ஒரு தரமான படைப்பு தனக்கு தேவையானதை தானே தேடிக் கொள்ளும். அதுபோலத்தான் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படமும் இருக்கிறது. இப்படம் ஏதோ ஒன்றை செய்யப் போகிறது என்பது மட்டும் உறுதி. படத்தை மார்ச் மாதம் வெளியிட உள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x