“முதலில் தனுஷ், அடுத்து நான்” - சிக்ஸ் பேக் சர்ச்சைக்கு விஷால் விளக்கம்

“முதலில் தனுஷ், அடுத்து நான்” - சிக்ஸ் பேக் சர்ச்சைக்கு விஷால் விளக்கம்

Published on

சூர்யாவுக்கு முன்பே தனுஷும், தானும் சிக்ஸ் பேக் வைத்துவிட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ‘ரெட்ரோ’ விழாவில் நடிகர் சிவகுமார் பேசும் போது, “வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது” என்று கூறியிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு இடையே விவாதத்தை கிளப்பியது. பலரும் விக்ரம், விஷால் என ஒவ்வொரு நடிகரின் பெயரைக் கூறி அவர்தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார் என்று விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து விஷால் பேசியுள்ளார். அதில், “முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தவர் தனுஷ்தான். வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ படத்தில் க்ளைமாக்ஸில் வைத்திருப்பார். அதன் பிறகு ‘சத்யம்’ படத்தின் நான் வைத்தேன். தொடர்ந்து ‘மதகஜராஜா’ படத்திலும் வைத்தேன். ஒருவேளை அவர்கள் அதை மறந்திருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.

2008-ல் கவுதம் மேனன் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யா சிக்ஸ் பேக்ஸ் உடன் தோன்றி இருப்பார். அந்தக் காலகட்டத்தில் அது மிகவும் பிரபலமானது. ஆனால், அதற்கு முன்பு 2007-ல் வெளியான ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷ் சிக்ஸ் பேக் உடன் தோன்றியிருப்பார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in