Published : 19 Mar 2025 02:08 PM
Last Updated : 19 Mar 2025 02:08 PM
‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் எப்போது தொடங்கப்படும் என்பதற்கு இயக்குநர் நாக் அஸ்வின் பதிலளித்துள்ளார்.
நானி மற்றும் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்த ‘யவடே சுப்பிரமணியம்’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை முன்னிட்டு இயக்குநர் நாக் அஸ்வின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில் ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு நாக் அஸ்வின், “டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமதி (தீபிகா படுகோன்) மற்றும் அஸ்வத்தமா (அமிதாப் பச்சன்) ஆகியோரது முன்கதைகள் கூறியதால் பிரபாஸின் காட்சிகள் குறைவாக இருந்திருக்கும்.
முன்கதைகள் அனைத்துமே முடிவடைந்துவிட்டதால், இனி நடக்கப் போவது மட்டுமே. ஆகையால், இரண்டாம் பாகம் முழுக்கவே கர்ணா (பிரபாஸ்) மற்றும் அஸ்வத்தமா (அமிதாப் பச்சன்) ஆகியோரை முன்வைத்து இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முதல் பாகத்தில் யாஷ்கின் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார் கமல். அவருடைய அறிமுகத்துடன் முதல் பாகம் இருக்கும். தற்போது 2-ம் பாகத்தில் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் எப்படி கமலை எதிர்கொள்கிறார்கள் என்று இருக்கும் என தெரிகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், பசுபதி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சுமார் 600 கோடி பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்து வெளியிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment