Published : 23 Oct 2024 09:44 AM
Last Updated : 23 Oct 2024 09:44 AM

சல்மான் கானுக்கு அச்சுறுத்தல்: ஏ.ஆர்.முருகதாஸ் பட ஷூட்டிங்கில் பாதுகாப்பு அதிகரிப்பு

நடிகர் சல்மான் கானுக்கு குஜராத் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டபோது, அரியவகை மானை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த மானை, பிஷ்னோய் இன மக்கள் புனிதமாகக் கருதி வருகின்றனர். இதனால் அந்த மக்களிடம் சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் கொல்வோம் என்றும் லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டல் விடுத்திருந்தார்.

கடந்த ஏப்ரலில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த சிலர் சல்மான் வீட்டில் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினர். பின்னர் அவரின் நெருங்கிய நண்பரும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், கடந்த சில நாட்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னோய் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா நாயகி. இதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ‘பாபா சித்திக் கொல்லப்பட்டதை சல்மான் கானால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; அவரால்படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்த முடியாது என்பதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டது. ஆனால், சல்மான் கான் தரப்பு இதை மறுத்துள்ளது.

“பிக்பாஸ் 18 படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்புடன் கலந்துகொண்ட அவர், இப்போது ‘சிக்கந்தர்’ படப்பிடிப்புக்குச் சென்றுள்ளார். அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி வரை அதன் படப்பிடிப்பில் சல்மான் கான் கலந்துகொள்வார்” என்று அவர் தரப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x