Published : 22 Oct 2024 09:08 PM
Last Updated : 22 Oct 2024 09:08 PM

‘ஏஞ்சல்’ படத்துக்கு 8 நாள் கால்ஷீட் தரவில்லை: உதயநிதிக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரிய மனு மீது அக்.28-ல் உத்தரவு 

சென்னை: ‘ஏஞ்சல்’ படத்துக்காக 8 நாட்கள் கால்ஷீட் தரவில்லை என துணை முதல்வர் உதயநிதிக்கு எதிரான வழக்கை நிராகரிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் அக்.28-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவன உரிமையாளரான ராமசரவணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “துணை முதல்வரான உதயநிதி நடிகராக இருந்தபோது எங்களது தயாரிப்பில் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. 20 சதவீத படப்பிடிப்பு பாக்கியுள்ள நிலையில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்து கொடுக்காமல் ‘மாமன்னன்’ படத்தில் நடித்த உதயநிதி, அந்த படமே தனக்கு கடைசி படம் என அறிவித்துள்ளார். எனவே ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து கொடுக்கவும், அத்துடன் ரூ.25 கோடியை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி துணை முதல்வரான உதயநிதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓஎஸ்டி பிலிம்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஸ்வரன், “ஏஞ்சல் படத்துக்காக 8 நாட்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். இதனால் உதவி இயக்குநர்கள், திரைப்பட கலைஞர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என வாதிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “இந்த படத்தில் மனுதாரர் நடித்துக்கொடுக்க வேண்டிய காட்சிகள் ஏற்கெனவே நிறைவு பெற்று விட்டது. அதனால் தான் ‘மாமன்னன்’ படம் தனக்கான கடைசி படம் என மனுதாரர் அறிவித்தார்” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு மீது வரும் அக்.28-ம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x