Published : 19 Oct 2024 04:37 AM
Last Updated : 19 Oct 2024 04:37 AM

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்: ரூ.2 கோடியில் குண்டு துளைக்காத கார் வாங்கினார்

மும்பை: நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு லாரன்ஸ் பிஷ்னோய் மாஃபியா கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

மும்பை போக்குவரத்து போலீஸாருக்கு வாட்ஸ்அப்பில் வந்த மிரட்டல் செய்தியில் கூறப்பட்டுள்ள தாவது: இந்த செய்தியை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சல்மான் கான் உயிரோடு இருக்கவேண்டும் என்றால் ரூ.5 கோடியை தர வேண்டும். லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர சல்மான் கான் இந்த பணத்தை கட்டாயம் தர வேண்டும். பணம் தரவில்லையென்றால் சல்மான் கானின் முடிவு பாபா சித்திக்கை விட மிக மோசமானதாக இருக்கும். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர்தான் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் மிகவும் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றனர். இந்த சூழ்நிலையில், நடிகர் சல்மான் கானை கொலை செய்யும் சதித் திட்டத்துடன் சுற்றித்திரிந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேரந்த சுகா என்ற சுக்பீர் பல்பீர் சிங்கை மும்பை போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். இந்த மிரட்டலையடுத்து, சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சல்மான் கான் தனது பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், குண்டுதுளைக்காத நிசான் பேட்ரோல் எஸ்யுவி காரை ரூ.2 கோடியில் வாங்கியுள்ளார். அவர் இந்த காரை துபாயிலிருந்து இறக்குமதி செய்துள்ளார். வெடிகுண்டு எச்சரிக்கை அலாரம், குண்டு துளைக்காத கடினமான பக்கவாட்டு கண்ணாடிகள், பயணிகள் மற்றும் டிரைவரை பாதுகாக்கும் வகையிலான திரை மறைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்கள் இந்த நிசான் காரில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x