Published : 19 Aug 2024 03:57 PM
Last Updated : 19 Aug 2024 03:57 PM

‘விலங்கு’ வெப் சீரிஸ் இயக்குநருடன் கைகோக்கும் நடிகர் சூரி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: ‘கருடன்’ பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி அடுத்ததாக ‘விலங்கு’ வெப்சீரிஸ் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜுடன் இணைகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷை வைத்து ‘புரூஸ் லீ’ படத்தை இயக்கினார் பிரசாந்த் பாண்டியராஜ். ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. ஆனால், அடுத்து விமலை வைத்து அவர் இயக்கிய ‘விலங்கு’ வெப்சீரிஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். இந்நிலையில் அவர் சூரியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

சூரியை பொறுத்தவரை அவரது நடிப்பில் கடைசியாக ‘கருடன்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘கொட்டுக்காளி’ திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்த சூழலில் பிரசாந்த் - சூரி இணையும் புதிய படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார். மேலும் படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x