Published : 31 Jul 2024 07:00 AM
Last Updated : 31 Jul 2024 07:00 AM

இன்ஸ்பெக்டர்: அஞ்சலி தேவி கொடுத்த அந்தஸ்து!

தமிழ் நாடக முன்னோடிகளான டி.கே.எஸ்.சகோதரர்கள் நடத்திய மாறுபட்ட நாடகங்கள் அப்போதுபிரபலம். அவர்கள் நடத்தி வரவேற்பைப் பெற்ற, மனிதன், கள்வனின் காதலி, ரத்த பாசம் உட்பட சில நாடகங்கள் திரைப்படங்களாகி இருக்கின்றன. அதில் ஒன்று ‘இன்ஸ்பெக்டர்’.

நா.சோமசுந்தரம் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இந்தப் படத்தை ஆர்.எஸ்.மணி இயக்கினார். இவர் புனர்ஜென்மம், கண்ணகி, மாமன் மகள், தேவகி, ரத்த பாசம் உட்பட பல படங்களை இயக்கியவர். நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்த இதில், டி.கே.சண்முகம், அஞ்சலி தேவி,டி.கே.பகவதி, எம்.எஸ்.திரவுபதி, எஸ்.பாலச்சந்தர், பி.கே.சரஸ்வதி, எஸ்.ஏ.நடராஜன், எம்.ஆர்.சந்தானம் என பலர் நடித்தனர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். மருதகாசி, கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கா.மு.ஷெரீப், டி.கே.சுந்தர வாத்தியார் பாடல்கள் எழுதினர்.

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்தது. கோவையை சேர்ந்த இந்நிறுவனம் சென்னையில் நெப்டியூன் ஸ்டூடியோவை (பின்னர் சத்யா ஸ்டூடியோ) குத்தகைக்கு எடுத்து படங்களைச் சொந்தமாகவும் மற்ற நிறுவனங்களுடனும் இணைந்தும் தயாரித்தது. அதில் சொந்தமாகத் தயாரித்த படங்களில் ஒன்று, ‘இன்ஸ்பெக்டர்’.

இன்ஸ்பெக்டரான டி.கே.பகவதியின் சகோதரி சரஸ்வதி. இவரது பள்ளித் தோழன் எஸ்.பாலசந்தர். சரஸ்வதிக்கு நடனத்தின் மீது ஆர்வம். நடனம் பயிற்றுவிக்கத் தனது நண்பர் டி.கே.சண்முகத்தை அறிமுகம் செய்கிறார் பாலசந்தர். சண்முகம் அவரை வசியப்படுத்துகிறான். அவள் தாய்மையடைகிறாள். இது தெரியாமல் பாலசந்தருக்கு சரஸ்வதியை மணமுடிக்க நினைக்கின்றனர், இன்ஸ்பெக்டரும் அவர் மனைவியும். ஆனால், பாலசந்தர், கிராமத்துப் பெண்ணான அஞ்சலி தேவியைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். சண்முகம் அவரையும் வசியப்படுத்த முயற்சிக்க, இன்ஸ்பெக்டர் என்ன செய்கிறார் என்பது கதை.

இதில், ராதா ஜெயலட்சுமி பாடிய, ‘ஆசையை மவுனமாய் பேசிடும் கண்களும்’, ஜிக்கி பாடிய ‘உனையல்லால் துணையாரம்மா’, எம்.வி.சுவாமிநாதன் பாடிய ‘வண்டுமொய்க்காத கூந்தல்’, எம்.எல்.வசந்த குமாரி, வி.என்.சுந்தரம் பாடிய, ‘வருவாய் வனமோகனா’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

இதில் பாலசந்தரின் சிறப்பான நடிப்பு பேசப்பட்டது. படத்துக்கு நட்சத்திர அந்தஸ்தைக்கொடுத்தார் அஞ்சலி தேவி. சரஸ்வதியின் மயக்கும் நடனங்களும் பார்வையாளர்களை ஈர்த்தன. 1953-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம் நாடகமாக வெற்றிபெற்ற போதும் திரைப்படமாக வரவேற்பைப் பெறவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x