Published : 17 Jul 2024 09:09 PM
Last Updated : 17 Jul 2024 09:09 PM

“ரூ.1,000 கோடி வசூல் என்பது எனக்கு பெரிய விஷயம்!” - ‘கல்கி 2898 ஏடி’ குறித்து அமிதாப் பச்சன் 

மும்பை: “பிரபாஸுக்கு ரூ.1000 கோடி வசூல் என்பது வழக்கமானதாக இருக்கலாம். காரணம் அவரது பல படங்கள் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டியுள்ளன. ஆனால், எனக்கு இது பெரிய விஷயம். இதுபோன்ற மாபெரும் படத்தில் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மகிழ்வைத் தருகிறது” என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

‘கல்கி 2898 ஏடி’ படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும், படத்தின் வெற்றிகுறித்தும் பேசி அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள வீடியோவில், “கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் பரவலாக அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

பார்வையாளர்களின் அன்பும், பாசமும் ஒருபுறம், மறுபுறம் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலையும் கூட்டியுள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும், படக்குழுவின் உழைப்பும் தான் இதற்கு காரணம். இந்தப் படம் குறித்து இயக்குநர் நாக் அஸ்வினுக்கு தொலைநோக்கு பார்வை இருந்தது. இந்தப் படத்தில் சக கலைஞர்களான கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட கலைஞர்களுடன் நடிக்க வாய்ப்பளித்தற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், “பல ஆண்டுகள் உழைப்பு இன்று வெற்றியாக பலனளித்துள்ளது. பிரபாஸுக்கு ரூ.1000 கோடி வசூல் என்பது வழக்கமானதாக இருக்கலாம். காரணம் அவரது பல படங்கள் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டியுள்ளன. ஆனால் எனக்கு இது பெரிய விஷயம். இது போன்ற மாபெரும் படத்தில் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மகிழ்வைத் தருகிறது.

உங்களில் பலருக்குத் தெரியாது. நான் இந்தப் படத்தை 4 முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போது எனக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது எனக்கு மற்றுமொரு படமல்ல. நமது கலாசாரம் மற்றும் புராணக்கதைகள் குறித்த கல்வியாக இதனை கருதுகிறேன். இந்த கதையை நம்பகமான அழகான படமாக மாற்றி, மக்களிடையை கொண்டு சேர்த்திருக்கிறார் நாக் அஸ்வின்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x