Published : 10 Jul 2024 12:05 AM
Last Updated : 10 Jul 2024 12:05 AM

“சிறை உணவு செரிப்பதில்லை, வீட்டு உணவு வேண்டும்” - நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் மனு

தர்ஷன் | கோப்புப் படம்

பெங்களூரு: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன், சிறையில் வழங்கப்படும் உணவு தனக்கு செரிமானம் ஆவதில்லை என்பதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி சித்ரவதை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்ஸர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சிறையில் தனக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சிறையில் வழங்கப்படும் உணவு தனக்கு செரிமானம் ஆவதில்லை என்றும் அந்த உணவை தொடர்ந்து சாப்பிட முடியாததால் தன்னுடைய உடல் எடை கணிசமாக குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். இத்துடன் ஆடைகள், படுக்கை மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றையும் வழங்குமாறு தர்ஷன் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தனது தோழி பவித்ரா கவுடாவை ஆன்லைனில் மிரட்டி தொந்தரவு செய்ததாக கூறி, ரேணுகா சுவாமி என்ற தனது ரசிகரை ஆள் வைத்து கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் மைசூரில் இருந்த அவரை கடந்த ஜூன் 11 அன்று கர்நாடக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. ரேணுகா சுவாமியிடன் உடலை காமாட்சிபாளையத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் வீசியதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x