Published : 05 Jul 2024 11:32 PM
Last Updated : 05 Jul 2024 11:32 PM

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: மருத்துவமனையில் கண்ணீர் விட்டு அழுத பா.ரஞ்சித்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இன்று சென்னையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித் அங்கு கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தை உலுக்கியுள்ள இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், ஐந்து தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் பலரும் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது பலரும் சூழந்து கொண்டு கதறி அழுதனர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு விரைந்து வந்த இயக்குநர் பா.ரஞ்சித் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.

சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x