Published : 01 Jul 2024 11:10 PM
Last Updated : 01 Jul 2024 11:10 PM

“எங்களுக்குள் பொறாமை கிடையாது” - ரஜினி உடனான நட்பு குறித்து கமல் நெகிழ்ச்சி!

மும்பை: “எந்தவொரு நடிகர்களையும் போலவே எனக்கும் ரஜினிக்கும் வெளிப்படையான போட்டி உண்டு. ஆனால் எங்களுக்குள் பொறாமை கிடையாது” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கியுள்ள ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடித்து முடித்துள்ளார். வரும் ஜூலை 12 அன்று வெளியாகவுள்ள இப்படத்துக்கான விளம்பரப் பணிகளில் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் மும்பையில் ‘இந்தியன் 2’ படம் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் ரஜினி உடனான நட்பு குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: எங்களுடையது புதிய கூட்டணி அல்ல. நாங்கள் இருவரும் சேர்ந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளோம். அதன் பிறகு சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் மற்ற போட்டியாளர்கள் போல் கிடையாது. எங்கள் இருவருக்கும் ஒரே குருதான்.

மற்ற நடிகர்களைப் போலவே எங்கள் இருவருக்கும் இடையே போட்டி இருக்கும். ஆனால் பொறாமை கிடையாது. எங்கள் இருவருடையதும் வெவ்வேறு பாதைகள். மேலும் நாங்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டது கிடையாது. இது நாங்கள் இருவரும் எங்களுடைய 20களில் செய்துகொண்ட ஒப்பந்தம்” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் இந்தி ஆடியன்ஸ் குறித்து பேசிய அவர், “எனக்கு பாடம் கற்பித்த இந்தி ரசிகர்களுக்கு நான் முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன். தமிழ்நாடுதான் எனக்கான இடம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் ஒரு இந்தியன் என்று எனக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் உணர்த்தினீர்கள்.

ஒரு தென்னிந்திய நடிகனாக இருந்த என்னை, நீங்கள் தான் ஒரு இந்திய நடிகனாக மாற்றினீர்கள். அதற்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னுடைய முதல் இந்தி படத்தின்போது எனக்கு இந்தியில் ஒரு வார்த்தை கூட தெரியாது. உங்களுடைய ஆதரவும், கைதட்டலும் இன்றி மீண்டும் இந்த மேடையில் என்னால் தோன்றியிருக்க முடியாது” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x