Published : 01 Jul 2024 05:41 PM
Last Updated : 01 Jul 2024 05:41 PM

“சுசித்ரா தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்” -  உயர் நீதிமன்றத்தில் கார்த்திக் குமார் குற்றச்சாட்டு

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பாடகி சுசித்ரா, தொடர்ந்து தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகர் கார்த்திக் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தம்பதியரான நடிகர் கார்த்திக் குமாரும், பாடகி சுசித்ராவும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு பிரிந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பாடகி சுசித்ரா, முன்னாள் கணவரான கார்த்திக்குமார் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். பாடகி சுசித்ராவின் நேர்காணல் காரணமாக தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே 1 கோடியே ஆயிரம் ரூபாயை தனக்கு மானநஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் கார்த்திக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை சுசித்ரா மீண்டும் தெரிவித்து வருவதாக கார்த்திக்குமார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x