Published : 01 Jul 2024 03:44 PM
Last Updated : 01 Jul 2024 03:44 PM

மம்மூட்டி எடுத்த புகைப்படம் ரூ.3 லட்சத்துக்கு ஏலம்

கொச்சி: மலையாள நடிகர் மம்மூட்டி எடுத்த ‘புல் புல்’ எனப்படும் ‘கொன்டைக்குருவி’ புகைப்படம் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்தப் புகைப்படத்தை கேரள தொழிலதிபர் வாங்கியுள்ளார். மேலும், விரைவில் கட்டப்பட உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் இந்தப் புகைப்படம் வைக்கப்பட உள்ளது.

மறைந்த புகழ்பெற்ற பறவையியலாளர், எழுத்தாளர் கே.கே.நீலகண்டன் என்ற இந்துச்சூடனின் (Induchoodan) நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கொச்சியில் 3 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்துச்சூடன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்தப் புகைப்படக் கண்காட்சியில் 23 புகைப்படக் கலைஞர்களால் படப்பிடிக்கப்பட்ட 61 படங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி க்ளிக் செய்த ‘புல் புல்’ எனப்படும் ‘கொண்டைக்குருவி’யின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வின் இறுதி நாளன்று இந்தப் புகைப்படம் ஏலம் விடப்பட்டது. இதனை ரூ.3 லட்சத்துக்கு தொழிலதிபர் அச்சு உல்லட்டில் (Achu Ullattil) என்பவர் வாங்கியுள்ளார். கோழிக்கோட்டில் விரைவில் வர உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் இந்தப் புகைப்படம் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “ஏலத்தில் கிடைப்பெற்றுள்ள தொகை புகைப்படக் கண்காட்சியை நடத்தும் இந்துச்சூடன் அறக்கட்டளை சார்பில் கேரள பறவைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்படும்” என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x