Published : 31 May 2024 06:35 PM
Last Updated : 31 May 2024 06:35 PM

பார்வதி, ஊர்வசியின் ‘உள்ளொழுக்கு’ பட முதல் தோற்றம் வெளியீடு

திருவனந்தபுரம்: நடிகர்கள் பார்வதி திருவொத்து மற்றும் ஊர்வசி இணைந்து நடித்துள்ள ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku) மலையாளப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அழுத்தமான இரண்டு நடிகர்களின் இணைவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் பார்வதி திருவொத்து கடைசியாக நடித்து மலையாள படம் ‘வொண்டர் வுமன்’. 2022-ல் வெளியான இந்தப் படத்தை அஞ்சலி மேனன் இயக்கியிருந்தார். இதையடுத்து அவர் இந்தியில் ‘கடக் சிங்’ படத்தில் நடித்தார்.

தமிழில் அவர் நடிப்பில் ‘தங்கலான்’ படம் உருவாகியுள்ளது. அடுத்ததாக பார்வதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள மலையாள திரைப்படம் ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku). இந்தப் படத்தில் பார்வதியுடன் இணைந்து ஊர்வசியும் நடித்துள்ளார். ஊர்வசியின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘J.பேபி’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இவர்கள் இணையும் இப்படத்தை கிறிஸ்டோ இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் அண்மையில் கேரளாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘Curry & Cyanide: The Jolly Joseph Case’ என்ற ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றது. படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முதல் தோற்றம் எப்படி? - முதல் தோற்றத்தை பகிர்ந்துள்ள பார்வதி அதில், “அமைதியான தண்ணீருக்கு அடியில் ரகசியங்கள் அசைந்துகொண்டிருக்கின்றன” என கேப்ஷனிட்டுள்ளார். பார்வதியும், ஊர்சியும் தண்ணீரில் நின்றுகொண்டிருக்கும் வகையில் முதல் தோற்றம் வடிவமைக்கபட்டுள்ளது. இருவர் முகத்திலும் ஒருவித சோகம் இழையோடிக்கொண்டிருக்கிறது. இருவரின் கூட்டணியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x