Published : 28 May 2024 08:57 AM
Last Updated : 28 May 2024 08:57 AM

‘வடக்கன்’ தலைப்பை சென்சார் மறுக்க என்ன காரணம்? - பாஸ்கர் சக்தி நேர்காணல்

பாஸ்கர் சக்தி

வெண்ணிலா கபடி குழு, எம்மகன், நான் மகான் அல்ல உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் பாஸ்கர் சக்தி, தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கு கதை, வசனம் எழுதியிருந்தார். அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘வடக்கன்’. இந்த டைட்டில், சர்ச்சையில் சிக்கியதை அடுத்து ‘ரயில்’ என்ற தலைப்புடன் வெளியாக இருக்கிறது படம். இயக்குநர் பாஸ்கர் சக்தியிடம் பேசினோம்.

வடக்கன் தலைப்பை சென்சார் மறுக்க என்ன காரணம்?

குறிப்பிட்ட சாராரை குறைச்சு மதிப்பிடறதா இந்த தலைப்பு இருக்குனு அவங்க நினைக்கிறாங்க. நான் அப்படி நினைக்கலை. எனக்கு அப்படித் தோணவும் இல்லை. ஆனா, ‘இந்த தலைப்பு, அவங்களை அவமானப்படுத்தற மாதிரி இருக்கு. ஒரு மொழி பேசறவங்களையோ, ஒரு பகுதியை சேர்ந்தவங்களையோ அப்படி வேறுபடுத்தி, வித்தியாசப்படுத்திப் பார்க்கக் கூடாது, அது சமூகத்துல பிரிவினையை உண்டாக்கும், அதனால தலைப்பை மாத்துங்க’ன்னு சொன்னாங்க. இது அவங்க வாதம்.

நீங்க என்ன சொல்றீங்க?

தனிப்பட்ட முறையில என் கருத்து என்னன்னா, ஒரு கதைக்கு ஏற்ற தலைப்பை வைக்கிறோம். அதைக் கதையோட பொருத்திப் பார்த்துதான், அது வேணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணணும். ஒரு வார்த்தையை மட்டும் வச்சுகிட்டு, ‘இது நல்லாயில்ல, வேற வையுங்க’னு சொல்றது சரியானதில்லைன்னு நினைக்கிறேன். எப்போதும் குடிச்சுட்டே இருக்கிற ஒருத்தனை, ‘குடிகாரப்பயலே’ ன்னுதானே இன்னொருத்தன் திட்டுவான். அது தப்பான வார்த்தை, அது கூடாதுன்னு சொன்னா, எப்படி கதை பண்ண முடியும்? ரூல்ஸ்-னு ஒன்னு இருக்கும். இருந்தாலும் ‘கிரியேட்டிவ் ஒர்க்’ல அந்த வார்த்தை என்ன அர்த்தத்துல உபயோகப் படுத்தப்பட்டிருக்கு, என்ன காரணத்துல சொல்லப்பட்டிருக்குன்னு தெரிஞ்சுகிட்டு மறுக்கறது சரியா இருக்கும். அது இல்லாம வார்த்தையை புடிச்சுட்டு முடிவு எடுக்கிறது, கிரியேட்டிவ் விஷயங்களுக்கு நியாயமானதா இல்லைன்னு நினைக்கிறேன்.

படத்தின் கதை பிரிவினையைத்தான் பேசுதா?

பிரிவினையையோ, வேற்றுமையையோ வலியுறுத்துற கதை இல்லை. இது எல்லோரும் ரசிக்கக் கூடிய எமோஷனலான கதை. மனிதர்கள், சக மனிதர்களை எப்படிப் பார்க்கணும்னு சொல்ற படம். வெவ்வேறுவிதமான ரசனை, மொழி, இனம், கலாச்சாரம், உணவு… இப்படி இருந்தாலும் நாம ஒன்னாதான் வாழ வேண்டியிருக்கு. அப்படி பழகும்போது மத்தவங்களை எப்படி அணுகணும், எப்படியிருந்தா சமூகத்துக்கு நல்லாயிருக்கும் அப்படிங்கற என் பார்வையை, இந்தப் படத்துல சொல்லியிருக்கேன்.

வட இந்தியர்களை பற்றி சொல்றீங்களா?

பிழைப்புக்காக இங்க வர்ற ஒரு வட இந்திய குடும்பத்துக்கும் தென்னிந்திய குடும்பத்துக்குமான உரையாடல், இந்தப் படத்துல தொடர்ந்து இருக்கும். அது எப்படியிருக்கு, எப்படியிருக்கணுங்கறதை சொல்லியிருக்கேன். கமர்ஷியலா எல்லோரும் ரசிக்கும்படியா இருக்கும்.

பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கீங்க. எழுத்தைக் காட்சிப்படுத்தறது பெரிய வேலைன்னு சொல்வாங்க… அறிமுக இயக்குநர் அனுபவம் எப்படி இருந்தது?

படத்தோட டெக்னீஷியன் டீம் எல்லோருமே என் நண்பர்களாக இருந்ததால எனக்கு கடினமா தெரியலை. தயாரிப்பாளர் வேடியப்பன், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்னு எல்லாருமே நண்பரகள்தான். மொத்த படத்தையும் ஷூட் பண்ணினது எங்க ஊர்ல. அதுமட்டுமில்லாம எழுத்துல இருக்கிறதை படத்துக்குள்ள எப்படி கொண்டு வரணுங்கறதை இத்தனை வருஷ சினிமா அனுபவத்துல தெரிஞ்சுகிட்டேன். அதனால அதுல எந்த சிரமமும் இல்லை.

படத்துல நடிச்சிருக்கிறவங்க பற்றி...

குங்குமராஜ், நாயகனா நடிச்சிருக்கார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். பரீட்ஷா, கூத்துப்பட்டறையில இருந்தவர். அந்த கேரக்டராகவே மாறியிருக்கார். இதுல ஹீரோயின் கேரக்டர் ரொம்ப முக்கியம். வைரமாலா நாயகியா ரொம்ப சிறப்பா நடிச்சிருக்காங்க. பர்வேஸ் மெஹ்ருங்கற பையன் வட இந்தியாவைச் சேர்ந்தவரா நடிச்சிருக்கார். காஷ்மீரை சேர்ந்தவர், பெங்களூருல வசிக்கிறார். ஒரு நண்பர் மூலமா ஆடிஷனுக்கு வந்தார். நல்லா நடிச்சிருக்கார். ஷமீரா, அவர் மனைவியா நடிச்சிருக்காங்க. என் நண்பர் ரமேஷ் வைத்யாவை ஒரு கேரக்டர்ல நடிக்க வச்சிருக்கோம்.

புடாபெஸ்ட் போயி பின்னணி இசை அமைச்சிருக்கீங்களாமே?

ஜனனி இசை அமைச்சிருக்காங்க. அவங்க கர்நாடக இசை ஆல்பங்கள் வெளியிட்டிருக்காங்க. வெஸ்டர்ன், இந்துஸ்தானி இசையில அவங்க மாஸ்டர். கிராமி அவார்ட் குழுவுல உறுப்பினர். உலக அளவில இசைத் துறையில நிறைய பங்களிப்பு பண்ணிட்டு வர்றாங்க. இந்தப் படத்துக்காகப் பின்னணி இசையில சில விஷயங்களை புடாபெஸ்ட் போயி பண்ணியிருக்காங்க. பின்னணி இசையும் பாடல்களும் அருமையா வந்திருக்கு.

திருப்பதி பிரதர்ஸ் படத்தை வெளியிடறாங்க…

இயக்குநர் லிங்குசாமிக்கு இந்தப் படத்துல தனி விருப்பம் இருந்தது. படம் பார்த்தார். அவருக்குப் பிடிச்சிருந்தது. சில கரெக்‌ஷன்கள் சொன்னார். அதை சரி பண்ணினதும் மறுபடியும் பார்த்தார். ‘இது நல்ல படம், மக்கள்ட்ட கொண்டு சேர்க்கணும்’னு அவரே ஆர்வமா திருப்பதி பிரதர்ஸ் மூலமா வெளியிடறார். அது எங்களுக்கு பெரிய பலம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x