Published : 05 Mar 2024 12:53 AM
Last Updated : 05 Mar 2024 12:53 AM

ஆடிட்டரிடம் ஆவணங்களைத் தாக்கல் செய்ய விஷாலுக்கு கால அவகாசம் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

விஷால் | கோப்புப்படம்

சென்னை: நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் சில ஆவணங்கள் கேட்டு தனது ஆடிட்டருக்கு அனுப்பிய கடிதம் தற்போது தான் கிடைத்துள்ளது. எனவே, அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என்று நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம், வழக்கின் விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை திருப்பி செலுத்தாத நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 15 கோடி ரூபாயை வழக்கு கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்திருந்தது. தங்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய ஆடிட்டர் ஒருவரை நியமிக்க விஷால் வைத்த கோரிக்கையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஆடிட்டர் ஶ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து உத்தரவிட்டார். அவரிடம் இருதரப்பும், 3 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு விவரங்களையும், இன்றைய நாள் வரைக்குமான வங்கிக் கணக்கு விவரங்களையும் ஆடிட்டரிடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் சில ஆவணங்கள் கேட்டு தனது ஆடிட்டருக்கு அனுப்பிய கடிதம் தற்போது தான் கிடைத்துள்ளது. எனவே, அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x