Published : 19 Jan 2024 01:05 AM
Last Updated : 19 Jan 2024 01:05 AM

“உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பதே” - ‘அன்னபூரணி’ விவகாரத்தில் நயன்தாரா வருத்தம்

நடிகை நயன்தாராவின் 75-வது திரைப்படமான, ‘அன்னபூரணி’ படம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "ஜெய் ஸ்ரீ ராம்... எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பின்னணி: நடிகை நயன்தாராவின் 75-வது திரைப்படம், ‘அன்னபூரணி’. ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்த இந்தப் படம் கடந்த டிச. 1-ம் தேதி வெளியானது. அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்தப் படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது. இந்த படத்தில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும் அர்ச்சகர் மகளான கதாநாயகி ‘நமாஸ்’ செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம் வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்று மும்பையை சேர்ந்த, சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இப்படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பலரும் இப்படத்தை தடை செய்யவேண்டும் என்று பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், சில நாட்கள் முன் இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து பரிஷர் அமைப்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. அக்கடிதத்தில் ’படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை அப்படத்தை நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்குவதாக உறுதியளிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x