Published : 18 Jan 2024 06:00 PM
Last Updated : 18 Jan 2024 06:00 PM

‘துருவ நட்சத்திரம்’ படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: நடிகர் விக்ரம் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் "துருவ நட்சத்திரம்" திரைப்படத்தில் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் உலகம் முழுவதும் 2023, நவ.24-ம் தேதி வெளியாக இருந்தது. இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "சிம்புவை நாயகனாக வைத்து "சூப்பர் ஸ்டார்" என்ற படத்தை இயக்குவதற்காக, கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். அதற்கு முன்பணமாக கடந்த 2018-ம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை. எனவே எங்களிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பணத்தை திரும்பக் கொடுக்கும்பட்சத்தில், படத்தை வெளியிடலாம் என்று கடந்தாண்டு நவ.22-ம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பணத்தைத் திரும்ப செலுத்தாததால், இதுவரை துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி மணிகண்டன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், இந்த வழக்கை மூன்று வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x