Published : 02 Jan 2024 03:18 PM
Last Updated : 02 Jan 2024 03:18 PM

விக்ரம் ஸ்டூடியோவில் உருவான ‘பக்த மார்க்கண்டேயா’!

மரணத்தை வென்ற மார்க்கண்டேயனின் கதையை வைத்து, கே.ராம்நாத் இயக்கிய திரைப்படம் 1935-ல் வெளியாகி இருக்கிறது. இதில் மாஸ்டர் வி.என்.சுந்தரம், ராஜபாளையம் குழந்தைவேலு பாகவதர், கண்ணா பாய் உட்பட பலர் நடித்திருந்தனர். இதே கதையை கொண்டு பி.எஸ்.ரங்கா இயக்கிய, திரைப்படம் ‘பக்த மார்க்கண்டேயா’. தனது 17 வயதிலேயே புகைப்படக் கலைஞராகி பிறகு ஒளிப்பதிவாளராக சினிமாவுக்கு வந்தவர், பிந்திகானவிலே ஸ்ரீனிவாஸ் ஐயங்கார் ரங்கா என்ற முழுப்பெயரைக் கொண்ட இந்த பி.எஸ்.ரங்கா.

பிறகு இயக்கம், தயாரிப்பு என முத்திரைப் பதித்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடமொழிகளில் படங்களை இயக்கியிருக்கிறார், இவர். சென்னையில் இருந்த விக்ரம் ஸ்டூடியோவின் உரிமையாளர். கன்னடத்தில் ராஜ்குமார் நடித்த 18 படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில், சிவாஜி நடித்த ‘தெனாலி ராமன்’ (1956), ‘நிச்சய தாம்பூலம்’ (1961), எம்.ஜி.ஆர் நடித்த ‘பட்டிக்காட்டு பொன்னையா’ (1973) உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார்.

இவர் தமிழ், கன்னடத்தில் தயாரித்து இயக்கிய படம், ‘பக்த மார்கண்டேயா’. குழந்தைஇல்லாத மிருகண்ட மகரிஷிக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும் சிவபெருமான், புத்திசாலியான உன் மகன் 16 வருடங்கள் மட்டுமே வாழ்வான் என்று சொல்லி விடுகிறார். மகனின் 16-வது வயதில் பெற்றோர், குழந்தை உயிரோடு இருக்க மாட்டானே என்று கவலைபடுகின்றனர். எமன் பாசக் கயிறை வீசும் நேரத்தில் அங்கு காட்சிக் கொடுக்கும் சிவபெருமான், தன் பக்தனான மார்க்கண்டேயனை மீட்பதுதான் படம்.

மாஸ்டர் ஆனந்த், மார்க்கண்டேயனாக 2 மொழிகளிலும் நடித்தார். வி.நாகையா,கே.ஏ.தங்கவேலு, பத்மினி பிரியதர்ஷினி, நாகேந்திர ராவ் உட்பட பலர் நடித்தனர். கன்னடத்துக்காக சில நடிகர்கள் மாற்றப்பட்டனர். படப்பிடிப்பு முழுவதும் விக்ரம் ஸ்டூடியோவில் நடந்தது.தமிழ் வசனங்களை துறையூர் மூர்த்தி எழுதினார். மருதகாசி பாடல்களை எழுதினார்.

மொத்தம் 16 பாடல்கள். இந்தப் படத்தின் பலமே பாடல்கள்தான் என்று அப்போது கூறப்பட்டது. சத்தியவதி குரலில், ‘உலகின் முழு முதலே, பரம்பொருளே, உன்மேலே அன்பினாலே தந்தேன் பாமாலை' , கே.ஆர். செல்லமுத்து, கே.ஜமுனராணி பாடிய, 'அக்கம் பக்கம் யாருமில்லே வெட்கம் கொள்ள தேவையில்லே’, சித்தூர் வி.நாகையா பாடிய 'திருமாலும் பிரம்மனும் தேடியும் காணாத சின்மயானந்த சிவமே', தத்துவப்பாடலான, 'உன்னையே நீ எண்ணிப் பாரு... உன்னை உணராமல் வாழ்வதால் பலன் என்ன கூறு? ' உட்பட பல பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.1957-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது இந்தப் படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x