Last Updated : 12 Dec, 2023 04:44 PM

1  

Published : 12 Dec 2023 04:44 PM
Last Updated : 12 Dec 2023 04:44 PM

ரஜினி என்னும் ‘லவ்’ மெட்டீரியலும், சில சான்றுகளும்! - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

கத்தி, துப்பாக்கி, ரத்தம் என வன்முறையை ‘மாஸ்’ என்று நம்ப வைத்து அதற்குள் அடைக்கப்பட்ட ரஜினி, அதையெல்லாம் தாண்டி, காதல் காட்சிகளில்தான் உண்மையாக ‘மாஸ்’ காட்டியிருப்பார். அப்படி நாம் மிஸ் செய்யும் ரொமான்டிக் ரஜினியை அவரது பிறந்தநாளில் நினைவுகூரும் பகிர்வு இது.

‘என்னமோ பேசணும்னு சொன்னீங்க?’ என ரஜினி ஆரம்பிப்பார். அதை எப்படி சொல்வது என தெரியாமல் குழப்பத்திலிருக்கும் ஸ்ரீதேவி, மெதுவாக பேசத்தொடங்குவார். ‘சுத்தி வளைச்சு பேசத்தெரியாது’ என தொடங்கி தன் காதலை வெளிப்படுத்திவிடுவார். உடனே திகைத்துப்போகும் ரஜினி, ‘இத நான் எதிர்பார்க்கல’ என கூறி அவரது புரோபசலை நிராகரித்துவிடுவார். அடுத்த கணமே ஸ்ரீதேவி கண்களிலிருந்து கண்ணீர் வடியும். அந்தக் காட்சியில் ஸ்ரீதேவியை, ரஜினி சமாதானம் செய்யும் விதம் அவ்வளவு அழகு. ஒரு குழந்தையைப்போல ஸ்ரீதேவியை ஆற்றுப்படுத்துவார் ரஜினி. தொடக்கத்திலிருந்த அந்த கறார் முகம் கரைந்து, ‘உங்கள நான் மனைவியா ஏத்துக்குறேன்’ என ரஜினி குழையும் அந்தக் காட்சியில், நீங்கா பசையை தன் இசையின் மூலம் பின்னாலிருந்து ஒட்டியிருப்பார் இளையராஜா. இயக்குநர் மகேந்திரனின் ‘ஜானி’ படத்தில் வரும் இந்தக் காட்சி நூற்றாண்டு கடந்தும் ரசிக்க வைக்கும். ரஜினிக்கு மாஸ், ஸ்டைலைத் தாண்டி காதலும் ரொமான்டிக்கும் அழகாகவே வரும்!

அதே ‘ஜானி’ படத்தில் மற்றுமொரு காட்சி. இரண்டு கரும்பு ஜூஸ் கிளாஸ்களை எடுத்துக்கொண்டு நடந்துவருவார் ரஜினி. தடுமாறி ஒரு கிளாஸிலிருக்கும் கரும்பு ஜூஸ் சிந்திவிடும். சிந்திய க்ளாஸை ஸ்ரீதேவி கேட்கும்போது, அதை கொடுக்க மறுத்து செல்லமாக நடக்கும் போராட்டத்தில் காருக்குள் வைத்திருக்கும் கேமராவின் வழியே காதல் வழியும். ‘நீ வெறும் காதலோட பேசு... மத்தத நான் பாத்துக்குறேன்’ என இளையராஜா இசைக்க வசனமில்லா வெற்றிடத்தை ரஜினியின் பாவனைகள் நிரப்பும். காதல் காட்சிகளில் ஸ்ரீதேவிக்கு டஃப் கொடுத்து நடித்திருப்பார் ரஜினி. ஸ்ரீதேவிக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்தி போகும் அந்தப் படம் ரஜினியின் காதல் சப்ஜக்ட்டுகளின் மாஸ்டர் பீஸ்!

அதேபோல ‘புதுக்கவிதை’ படத்தில் வரும் ரஜினியின் காதல் ரசிகர்களுக்கு திகட்டா திரை விருந்து! மீண்டும் தன் பழைய காதலியை சந்திக்கும் காட்சி அது. தன் அண்ணன் குழந்தையை அழைத்துவர பள்ளிக்குச் செல்லும் ரஜினி ஸ்டன்னாகி நிற்பார். படியின் மேலிருந்து ஜோதி அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருப்பார். இருவருக்கும் இடையே உள்ள தூரத்தை காதல் கவ்விக்கொள்ளும். ஜோதி ஒவ்வொரு படியாக இறங்க 'வெள்ளைப்புறா ஒன்று' பாடலின் ஹம்மிங் ஒலிக்க அந்த சீன் முழுவதுமே காதல் வழியும். தொடர்ந்து வரும் சீன்களின் உரையாடல்கள், க்ளோசப் ஷாட்கள் என முதல் காதல் நினைவுகளை தேக்கிவைத்த ஓர் ஆண் மகனை அப்படியே உருவகப்படுத்தியிருப்பார் ரஜினி. இருவரும் சந்தித்து பிரியும் காட்சி ஒன்றில் ஜோதி, ‘நான் போலாமா’ என கேட்க, சற்றும் யோசிக்காமல் ‘அதான் போயிட்டீயே’ என ரஜினி பதிலுரைக்கும் இடம் அட்டகாசம்!. அது இழந்த காதலை நினைத்து மருகும் ஓர் காதலனின் வடு.

‘தளபதி’ படத்தில் வரும் க்ளாஸிக் சீனை எப்போதும் மறக்க முடியாது. ‘நானா உன் பின்னாடி சுத்துனேன்... நானா உன்ன பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னே... நானா உன் தோள்ல சாஞ்சு அழுதேன்.,. போடி... போ’ என சொல்லி முடித்ததும் ஷோபானா அந்த இடத்தை விட்டு நகர, அத்தனை வலியையும் 15 செகண்டில் கடத்தியிருப்பார் ரஜினி. அந்த காட்சியில் சந்தோஷ் சிவனின் கேமராவும், இளையராஜாவின் வயலினும், புல்லாங்குழலும், ரஜினியின் நடிப்பும் போட்டி போட்டு ஒண்ணுக்கு ஒண்ணு சலச்சதில்ல என்பதை நிருபித்திருக்கும். அந்த காதல் காட்சி ரஜினி எனும் மாஸ் ஹீரோவிலிருந்த காதலனை வடிக்கட்டியிருக்கும். உண்மையில் மாஸெல்லாம் தாண்டி ரொமான்டிக் நாயகனாக ஜொலிப்பார்.

ரஜினி ஒரு லவ் மெட்டீரியல். அந்த மெட்டீரியலை சரியாக பயன்படுத்திய இயக்குநர்கள் மிகச் சிலரே.. அப்படியாக அண்மையில் ரொமான்டிக் ரஜினியை திரையில் பார்த்தது ‘காலா’ படத்தில் தான்! இருள் சூழ்ந்த வீட்டுக்குள் ஹீமா குரேஷி அமர்ந்திருப்பார். குடும்பத்தாரை பயமுறுத்த நுழையும் ரஜினி பயந்து நிற்பார். உண்மையில் பழைய காதல் பயமுறுத்தக் கூடியது தானே!.. பிரதீப் வாய்ஸ் ஒலிக்க, ரஜினிக்கும், ஹீமாவுக்குமான க்ளோசப் நீண்ட நாட்கள் கழித்து ரஜினியின் காதல் முகத்தை வெளிப்படுத்தியது. ‘எப்போ வந்த.. ஏதாவது சாப்டியா?’ என அதிர்ச்சியில் திணறி பேசும் ரஜினி வெகுவாக ரசிக்கவைத்திருப்பார்.

படம் முழுவதுமே இழையோடும் காதல் ரஜினி ஒரு ரொமான்டிக் ஹீரோவாவே நடிக்கலாம் என தோன்ற வைக்கும். மழைக்கும் மண்வாசத்துக்குமான உறவைப்போல காதல் காட்சிக்கும் ரஜினிக்குமான கனெக்‌ஷன் வேறலெவலில் இருக்கும். ‘பேட்ட’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’, ‘ஜெயிலர்’ படங்களில் அப்படியான ஒரு காதல் ரஜினியை அவரது ரசிகர்கள் மிஸ் செய்துள்ளனர். வெறும் மாஸும், ஆக்‌ஷனுமாகவே திரைப்பயணம் கடக்கிறது. ‘ஜானி’ ரஜினியை ‘காலா’ படத்தில் பா.ரஞ்சித் மீட்டெடுத்தார் என்றால் மிகையில்லை. அதற்கு பின் அப்படி யாரும் ரஜினியை பயன்படுத்தவில்லை. வன்முறை, தோட்டாக்களை மறக்கடித்து காதல், ரொமான்டிக் ரஜினியை பார்க்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் கோரிக்கை.

ஹேப்பி பர்த்டே காதல் நாயகன் ரஜினி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x