Published : 25 Nov 2023 03:17 PM
Last Updated : 25 Nov 2023 03:17 PM

ரூ.50 கோடி மதிப்பிலான ‘முதல்’ பங்களாவை மகளுக்கு பரிசளித்த அமிதாப் பச்சன்!

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜூஹுவில் ரூ.50 கோடி மதிப்புள்ள தனது ‘பிரதிக்‌ஷா’ பங்களாவை மகளுக்கு பரிசளித்துள்ளார். இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த பங்களா 890 மற்றும் 674 சதுர மீட்டர் அளவுடையவை.

அமிதாப் பச்சன் தனது ஆரம்ப காலக் கட்டத்தில் வாங்கிய முதல் பங்களாவான இதன் பத்திரப்பதிவு கடந்த நவம்பர் 8-ம் தேதி மும்பையில் நடைபெற்றது. ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் இந்த பங்களா குறித்து பேசியிருந்த அமிதாப் பச்சன், “இந்த பங்களாவுக்கு ‘பிரதிக்‌ஷா’ என்ற பெயரை அப்பாதான் வைத்தார்” என கூறி தந்தைக்கு பிடித்த கவிதை ஒன்றையும் நினைவுகூர்ந்தார். “யார் வேண்டுமானாலும் இங்கே வரலாம். ஆனால், யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை” என முடியும் அந்தக் கவிதையில் வரும் ‘பிரதிக்‌ஷா’ என்ற வார்த்தையை தான் இந்த பங்களாவுக்கு வைக்கப்பட்டதாக அமிதாப் பச்சன் கூறினார்.

மேலும், இது குறித்த நினைவுகளை பகிர்ந்தவர், “இது நான் வாங்கிய முதல் பங்களா. அப்பா ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் அம்மா தேஜி ஆகியோருடன் இந்த பங்களாவில் வாழ்ந்த நினைவுகள் மறக்க முடியாதவை. இந்த பங்களாவில்தான் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடைபெற்றது” என கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது இந்த பங்களாவை மகள் ஸ்வேதா நந்தாவுக்கு பரிசளித்துள்ளார். மும்பையின் ஜூஹுவில் இந்த பங்களாவை தவிர்த்து அமிதாப் பச்சனுக்கு சொந்தமான மேலும் சில வீடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினியுடன் இணைந்து ‘ரஜினி170’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x