Published : 13 Nov 2023 03:41 PM
Last Updated : 13 Nov 2023 03:41 PM

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்

தேனி: ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தில் வசனம் எழுதிய திரைப்பட எழுத்தாளர் ராசீ தங்கதுரை உடல்நலக்குறைவு காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காலமானார். அவருக்கு வயது 53.

கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. இந்தப் படம் விமர்சன ரீதியாக சினிமா ஆர்வலர்களிடையே பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் ராசீ தங்கதுரை. மேலும், கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘தேன்’ படத்துக்கும் வசனம் எழுதயவர். இப்படத்தின் வசனங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன. மேலும், இந்த இரண்டு படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் ராசீ தங்கதுரை.

ராமையா - சீனியம்மாள் தம்பதியரின் மகனான தங்கதுரை, பெற்றோர் மீதிருந்த அன்பால் தனது பெயரை ராசீ தங்கதுரை என மாற்றிக்கொண்டார். இருதய பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், ராசீ.பிரியன், சுகதேவ் திலீபன் என்ற இரு மகன்களும் உள்ளனர். ஆண்டிபட்டி கதிர்நரசிங்காபுரம் கிராமத்தில் இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மண்மனம் மாறாத, வாஞ்சை மிகுந்த நண்பரும், மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் வசனகர்த்தாவுமான எங்கள் அன்பிற்குரிய ராசீ.தங்கதுரை இன்று காலமானர்…” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x