Published : 09 Nov 2023 03:38 PM
Last Updated : 09 Nov 2023 03:38 PM

Bigg Boss 7 | “நிக்சனை தம்பியாக நினைத்தேன். ஆனால்...” - வினுஷா வேதனைப் பகிர்வு

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை உருவக்கேலி செய்தது குறித்து நிக்சன் கூறிய விஷயங்கள் தொடர்பாக சின்னத்திரை நடிகை வினுஷா தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையுடன் விளக்கமளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் நேற்றைய (நவ.08) எபிசோடில் நடந்த ஒரு டாஸ்க்கில் போட்டியாளர்கள் பல்வேறு தருணங்களில் பேசிய வார்த்தைகள் டிவியில் காட்டப்பட்டது. அவற்றை பேசிய போட்டியாளர்கள் முன்வந்து அவர் அதனை எந்தச் சூழலில் என்ன காரணத்துக்காக பேசினார் என்பதை சக போட்டியாளர்களுக்கு விளக்க வேண்டும். அந்த வகையில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வினுஷாவின் உடல் அமைப்பு குறித்து நிக்சன் கூறிய சில வார்த்தைகள் டிவியில் காட்டப்பட்டன. அது குறித்து விளக்கமளிக்க வந்த நிக்சன், தான் அவ்வாறு பேசியது வினுஷாவுக்கே தெரியும் என்றும், தவறான நோக்கத்தில் தான் அப்படி சொல்லவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில், நிக்சன் பேசியது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் சின்னத்திரை நடிகை வினுஷா. அப்பதிவில் அவர், “நான் இப்போது பிக்பாஸ் வீட்டில் இல்லை என்றாலும், இது குறித்து நான் பேச விரும்புகிறேன். முதல் வாரத்தில், எனக்கும் நிக்சனுக்கு இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது. உண்மையாகவே நான் அவரை ஒரு தம்பியாக நினைத்தேன். அந்த வகையில்தான் நான் அவரிடம் பழகவும் செய்தேன். ஆரம்பத்தில் அவர் என்னை கிண்டல் செய்ய தொடங்கியபோது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்லவில்லை. அதை வேடிக்கையாகவே எடுத்துக் கொண்டேன். எனினும், நாட்கள் செல்லச் செல்ல, அவர் எல்லையை கடக்கத் தொடங்கியது, நான் அவரிடம் அதனை நிறுத்துமாறு கூறினேன். காரணம், அவருடைய நடவடிக்கைகள் என்னை கஷ்டப்படுத்தியது. அவருடைய இந்த செயலுக்காக நான் அவரை நாமினேட் கூட செய்தேன். ஒருநாள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், அது என்னை கிண்டல் செய்ததற்காக மட்டுமே. அவரது இந்த பாடி ஷேமிங் கருத்துகளுக்காக அல்ல.

ஒரு விஷயம் தெளிவாக சொல்லிவிடுகிறேன். நான் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது நிக்சன் என்னை பாடி ஷேமிங் செய்தது குறித்து என்னிடம் அவர் மன்னிப்பு கேட்கவோ அல்லது அதுகுறித்து பேசவோ செய்யவில்லை. என்னிடம் அவர் இதனை சொல்லிவிட்டதாகவும், எனக்கு இது அனைத்துமே தெரியும் என்று தவறாக தகவலை நிக்சன் சொல்கிறார். எனக்கு எதுவும் தெரியாது. பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகே இதுகுறித்து நான் தெரிந்து கொண்டேன். ஒருவேளை இப்போது நிக்சன் மன்னிப்பு கேட்டிருந்தாலும் கூட, அது அவரை ஒரு நல்ல மனிதனாக ஆக்கிவிடாது. BULLY GANG-க்கு என்னுடைய பதில் என்னவென்றால், என்னை மட்டம் தட்டுவது, நிச்சயமாக வேடிக்கையோ விளையாட்டோ அல்ல. கடந்த வாரம் உரிமைக் குரல் எழுப்பிய பெண்ணியவாதிகள் இப்போது எங்கே? எனக்காக குரல் எழுப்பிய விசித்ராவுக்கு நன்றி.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நிக்சன் மீது நான் மிகுந்த மரியாதை வைத்து நான் அவரை என் தம்பியாக பாவித்தேன். அவர் எனக்கு வலியை கொடுத்திருந்தாலும் கூட. எனினும், அந்த வீடியோவையும், என்னைப் பற்றி அவர் கூறிய கருத்துகளையும் பார்த்த பிறகு அவர் மீதான என்னுடைய அத்தனை மரியாதையும் போய்விட்டது. இந்த வார இறுதியில் கமல் இந்த பிரச்சினை குறித்து பேசுவார் என்று நம்புகிறேன். இந்த பிரச்சினையில் எனக்காக பேசிய அனைவருக்கும் நன்றி” என்று வினுஷா அப்பதிவில் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் விசித்ரா, கூல்சுரேஷ், பூர்ணிமா, மாயா கிருஷ்ணன், ஜோவிகா, நிக்சன், உள்ளிட்ட பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கடந்த சில நாட்களுக்கு வைல்டு கார்டு மூலமாக அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், ஆர்ஜே ப்ராவோ ஆகியோர் உள்ளே நுழைந்தனர். பெண்களுக்கான பாதுகாப்பு, தகாத வார்த்தைகள் பேசுவது ஆகிய குற்றச்சாட்டுகளை மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் முன்வைத்ததால் பிரதீப் ஆண்டனி கடந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x